ஸ்பெஷல் அரேஞ்மென்ட்ஸ் வேண்டாம்! இங்கேயே சாப்பிடுகிறேன்! ஆச்சரியத்தில் ஆழ்த்திய அமைச்சர் சிவசங்கர்!
நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு துறை ரீதியான ஆய்வுப் பணிகளுக்கு சென்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அதிகாரிகளுக்கு சிரமம் கொடுக்காத வகையில் நடந்திருக்கிறார்.
பொதுவாக ஒரு அமைச்சர் வெளியூர் பயணம் மேற்கொள்கிறார் என்றால், அவரது பயண விவரம் முன்கூட்டியே உரிய மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு ஸ்பெஷல் அரேஞ்மென்ட்ஸ் செய்யப்படும்.
இந்நிலையில் அமைச்சர் சிவசங்கர் அது போன்ற சிறப்பு கவனிப்புகளை தவிர்த்து முடிந்தவரை எளிமையை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சிவசங்கர்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு நெருக்கமானவர் என அறியப்படும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நெல்லை மாவட்டத்துக்கு 2 நாட்களுக்கு முன்னர் ஆய்வுக்கு சென்றிருக்கிறார். அங்குள்ள பேட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரிக்கு சென்ற அவர் மாணவர்கள் விடுதியையும், உணவின் தரத்தையும் ஆய்வு செய்திருக்கிறார். மாணவர்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து விசாரித்த அவர் அங்கேயே மதிய உணவு சாப்பிட அமர்ந்திருக்கிறார்.

அதிகாரிகள் ஆச்சரியம்
இதையடுத்து அமைச்சருக்கு உடனடியாக வாழை இலை போடப்பட்டு சுடச்சுட சாதம், சாம்பார், கூட்டு பரிமாறப்பட்டிருக்கிறது. உணவின் தரத்தையும், சுவையையும் வெறுமனே கேட்டுவிட்டுச் செல்லாமல் அதை சாப்பிடவும் செய்த அமைச்சர் சிவசங்கரை பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் பாராட்டவும் செய்தனர். இதனிடையே சர்க்யூட் ஹவுஸில் உணவு ஏற்பாடு செய்து வைத்திருந்த அதிகாரிகளுக்கு அமைச்சரின் இந்த எளிமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வுக்கூட்டம்
அமைச்சருடன் ஆய்வுக்கு சென்றிருந்த பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்பும் அங்கு மதிய உணவு சாப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வுக்கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் சபாநாயகர் அப்பாவுவும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அமைச்சர்கள் ஆய்வு
முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் ஸ்டாலின், தனது அமைச்சரவை சகாக்களின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதனால் பெரும்பாலான அமைச்சர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதை காண முடிகிறது.












Click it and Unblock the Notifications