பல் பிடுங்கிய பல்வீர் சிங்.. அமுதா ஐஏஎஸ் விசாரணைக்கு நடுவே சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி உத்தரவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணையின்போது விசாரணை கைதிகளின் பற்களை கொடூரமான முறையில் பிடுங்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இன்று டிஜிபி சைலேந்திர பாபு வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளார். இதன் பின்னணியில் உள்ள முக்கிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை சேர்ந்தவர். இந்நிலையில் தான் சிறுசிறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் அழைத்து வருவோரின் பற்களை பல்வீர் சிங் மற்றும் போலீசார் பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பலரும் பல்வீர் சிங்கிற்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர். இதுதொடர்பாக அவர்கள் வீடியோக்கள் வெளியிட்டு தங்களுக்கு நேர்ந்த சித்ரவதையை வெளியிட்டனர். இதையடுத்து பல்வீர் சிங்கிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து பல்வீர் சிங் காத்திருப்பு பட்டியலுக்கு வைக்கப்பட்டார். மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முதலில் விசாரணை மேற்கொண்டார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வீர் சிங் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் ராஜ்குமார், போகபூமன், சந்திரசேகரன், ராஜகுமாரி, பெருமாள், சக்தி நடராஜன், சந்தானகுமார், மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த விவகாரம் மட்டும் விவாதப்பொருளில் இருந்து விலகவே இல்லை. தொடர் வலியுறுத்தலால் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறை 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.

அதோடு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உயர்மட்ட விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அதன்படி அமுதா ஐஏஎஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சம்பவம் நடந்த ஸ்டேஷன்களில் விசாரணையை தொடங்கினர்.
அமுதா ஐஏஎஸ் முதற்கட்ட விசாரணை நடத்திய நிலையில் கடந்த 2 நாட்களாக 2வது கட்ட விசாரணையை மேற்கொண்டார். இந்நிலையில் தான் பல்பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு பதில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இதற்கிடையே தான் டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவுக்கு என்ன காரணம்? என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமுதா ஐஏஎஸ் விசாரணையின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பல்பிடுங்கிய சம்பவம் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் நடந்துள்ளது. இதனால் சிபிசிஐடி விசாரணை தான் உகந்ததாக இருக்கும் என்ற பரிந்துரையின் பேரில் இந்த உத்தரவை டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications