தமிழகத்தில் இந்தி திணிப்பு இல்லை.. ”வைகோவுக்கு தேவையில்லாத விஷயம்”.. பொங்கிய நயினார் நாகேந்திரன்!
திருநெல்வேலி: இந்தியையும், இந்துத்துவா சக்திகளை நிலை நாட்ட பிரதமர் மோடி செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டி இருந்த நிலையில், சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது.
பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் 2028ம் ஆண்டுக்குள் அமையாவிட்டால் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி முடங்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதேபோல் அமைச்சர் எ.வ.வேலு, விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மூன்றரை மடங்கு அதிக இழப்பீடு வழங்கப்படும், மாற்று நிலம் வழங்கப்படும் மற்றும் புதிதாக வீடு கட்ட நிதியுதவி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம்
ஆனால் நிலம் கையகப்படுத்துவதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விமான நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் பரந்தூர் விமான நிலையம் விவகாரம் தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

நயினார் நாகேந்திரன்
இந்த நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து வேறு மாநிலம் சென்றால், அம்மாநில மொழியில் பேசினால் தான் மக்களுக்கு புரியும். அதேபோல் தமிழ்நாட்டில் இந்தி பேசினால் புரியாது. அதனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும் போது, தமிழில் பேசுகிறார்.

இந்தி மூலம் அரசியல்
ஆனால் பிரதமர் மோடி தமிழில் பேசினால், ஏமாற்றுகிறார் என்று விமர்சிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுவது தேவையில்லாதது. இந்தியை திணிப்போம் என்று மத்திய அரசு கூறவில்லை. இங்கே இந்தியை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையில் கூட தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

விமான நிலையம் தேவை
நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அந்த கட்டமைப்புகள பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது. வாஜ்பாய் தலைமையிலான அரசு, தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம் மக்களின் பயண நேரம் குறைந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி எந்தவொரு கட்டமைப்போ, மேம்பாடோ செய்தது இல்லை. அதனால் பரந்தூர் விமான நிலையம் அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுக விவகாரம்
தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதிமுக நடப்பது உட்கட்சி விவகாரம். அதனைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications