அண்ணாச்சி இப்போது வேண்டாம்.. களநிலவரத்தை விளக்கிய காங். நிர்வாகிகள்..!
நெல்லை: நாங்குனேரி தொகுதியில் தனித்து போட்டியிடலாமா என தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்துக்கேட்ட நிலையில், அவருக்கு களநிலவரத்தை நிர்வாகிகள் விளக்கினார்களாம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி கட்சியை வளர்ப்பதற்காக புது புது திட்டங்களை புகுத்தி வருகிறார். எப்போதும் ஆக்டிவாக உள்ளதை ஊடகத்திற்கு உணர்த்தும் வகையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுடச்சுட அறிக்கை கொடுக்கத் தவறுவதில்லை.

மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து வரும் அழகிரி, கட்சியினரை ஏரி, குளங்களை தூர்வார உத்தரவிட்டார். கரூர் மாவட்டத்தில் ஜோதிமணி எம்.பி.யும், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு நிர்வாகிகளும் மட்டுமே அவர் உத்தரவை ஏற்று தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர். மற்ற மாவட்டங்களில் எல்லாம் அதை பற்றிய சிறு தடம் கூட இல்லை.
இந்நிலையில், மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத்துடன் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது தனித்து செயல்படுவது பற்றி நிர்வாகிகளிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆனால், அவர்களோ இப்போது வேண்டாம் அண்ணாச்சி..திமுக கூட்டணி தான் நமக்கு சரி..திடீர்னு வெளியேறினால் தொண்டர்கள் ஓட்டம்பிடிப்பார்கள் என கள யதார்த்தத்தை உணர்த்தியுள்ளனர்.மேலும், பஞ்சாயத்து தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தால் தான் நமது நிர்வாகிகள் பலர் முக்கிய பொறுப்புகளுக்கு வரமுடியும். அதன் பிறகு பார்த்துக்கொள்வோம் என புட்டு புட்டு வைத்திருக்கின்றனர்.
ஒரு சில இடங்களில் மட்டும் ஆர்வமிகுதியில் லோக்கல் திமுகவினருடன் கருத்து வேறுபாடு உள்ள நிர்வாகிகள் மட்டும் அழகிரியை உசுப்பிவிட்டுள்ளனர். இரண்டு தரப்பு கருத்தையும் உள்வாங்கிக்கொண்ட அழகிரி, இது தொடர்பாக மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்., தங்கபாலு, உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications