லிங்க்கை க்ளிக் செய்தால் ரூ. 500.. பாஜகவினர் நூதன முறையில் ஏமாற்றுவதாக திமுக பரபர புகார்!
நெல்லை: செல்போனுக்கு அனுப்பப்படும் லிங்க் அழுத்தினால் ரூ. 500 தருவதாகக் கூறி நூதன முறையில் மக்களை பாஜகவினர் ஏமாற்றுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் திமுக நிர்வாகிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை லோக்சபா தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ட் புரூஸ், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நெல்லை தொகுதியில் வெல்லப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், நெல்லை தொகுதியில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாகவும், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் தர திட்டமிட்டுள்ளதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் செல்போன் ஆப் மூலம் ரூ. 500 தருவதாகச் சொல்லி பாஜக மோசடி வேலையில் இறங்கியுள்ளதாக நெல்லை மாவட்ட திமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
செல்போன் ஆப் ஒன்றில் லிங்க் அழுத்தினால் ரூ. 500 தருவதாகக் கூறி செல்போன் மூலம் நூதன முறையில் மக்களை பாஜகவினர் ஏமாற்றுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் திமுக நிர்வாகிகள் இன்று பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், "செல்போனில் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்து உள்ளே சென்றால் உங்களுக்கு ரூ. 500 கிடைக்கும் என பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள். உள்ளே போனால் தாமரை சின்னம் வருகிறது. அதில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்தால் உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பணம் திருடப்பட்டு விடும். எனவே எச்சரிக்கை செய்யும் வகையில் புகார் அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications