அடையாளமே இல்லாத ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும்போது.. எடப்பாடி பழனிசாமிக்கு ஆ.ராசா பதிலடி!
நெல்லை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயாளரும், எம்.பியுமான ஆ.ராசா உரையாற்றினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை விமர்சித்துப் பேசினார்.

ஆ.ராசா பேசுகையில், "முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கருணாநிதியின் பன்முகத்தன்மை என்பது உலகில் எந்த தலைவருக்கும் இதுவரை இல்லை. குறிப்பாக அவர் கொண்டு வந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் இதுவரை, பயன்பெறாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை கொடுத்த பேனா கருணாநிதியின் பேனா , பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கு கையெழுத்திட்ட பேனா, மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களுக்கும், பொது மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுக்கும் கையெழுத்திட்டதால்தான் அவரது நினைவாக பேனா வைக்கின்றோம். இந்தியாவிலேயே முதன் முதலில் கை ரிக்சா இழுத்தவர்களுக்கு சைக்கிள் ரிக்சா கொடுக்க வைத்த பெருமை கருணாநிதியின் பேனாவுக்கு உண்டு.
கலைஞரின் பேனா கையெழுத்திடவில்லை என்றால், பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகி இருக்க மாட்டார் அதேபோல எடப்பாடி பழனிசாமி பி.ஏ படித்திருக்க மாட்டார். எடப்பாடி பழனிசாமி, கருணாநிதிக்கு பேனா சின்னம் ஏன் வைக்க வேண்டும் என்கிறார். கருணாநிதியின் பேனா இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் கிடையாது.
அடையாளம் இல்லாத ஜெயலலிதாவுக்கு ரூ.35 கோடியில் நினைவிடம் வைத்துள்ளார்கள். 100 அடையாளங்களுடன் வாழ்ந்த கருணாநிதிக்கு பேனா சின்னம் வைப்பதற்குக் கேள்வி கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி." என விமர்சித்தார் ஆ.ராசா.












Click it and Unblock the Notifications