நெல்லை மேயர் தேர்தலில் திடீர் ட்விஸ்ட்.. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல் ராஜ் போட்டி?
நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் என்ற போட்டியிடுகிறார். இன்று மேயர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திடீர் திருப்பமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல் ராஜ் என்பவரும் போட்டியிட வேட்பு மனுவை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நெல்லை மேயர் தேர்தலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. சற்று நேரத்தில் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், திடீர் திருப்பமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவருமான பவுல்ராஜ் போட்டியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவரும் வேட்பு மனுவை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பவுல் ராஜ்: நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட இரண்டு பேர் வேட்பு மனுவை வாங்கியிருப்பதாக மாநகராட்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பெறுவதற்கான நேரம் தற்போது முடிந்துவிட்டது. வேட்பு மனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. இனி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். அதன்பிறகு 12- மணி முதல் 2 மணிக்குள் மேயர் தேர்தல் நடைபெறும்.
ராமகிருஷ்ணன்: திமுக வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யபடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், திடீர் திருப்பமாக பவுல் ராஜ் என்ற கவுன்சிலர் வேட்பு மனுவை வாங்கியிருப்பதாக வெளியான தகவல் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமகிருஷ்ணன் வழக்கம்போல் தனது சைக்கிளில் வந்தே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சரவணன் ராஜினாமா: நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த பி எம் சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவியது. இதனால், மாநகராட்சி கூட்டங்களை சுமுகமாக நடத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து கடந்த மாதம் மேயர் பதவியை பி.எம்.சரவணன் ராஜினாமா செய்தார்.
ஆலோசனை கூட்டம்: இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் கொடுத்த நிலையில் அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து, நெல்லை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
நெல்லையில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் திமுக கூட்டணிக்கு 51 கவுன்சிலர்கள் உள்ளனர். இதனால், நெல்லையின் அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேஎன் நேரு, நெல்லை எம்.எல்.ஏ அப்துல் வகாப் உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று நெல்லையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இன்று தேர்தல்: இந்தக் கூட்டத்திற்கு பிறகு திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். திமுகவே இங்கு பெரும்பான்மை என்பதால் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், நெல்லை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மட்டுமே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீர் திருப்பமாக பவுல் ராஜ் என்ற கவுன்சிலர் வேட்பு மனு வாங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications