மாடுகளால் அநியாயமாக பறிபோன உயிர்.. பதறவைத்த சம்பவத்தால் நெல்லை மாநகராட்சி பிறப்பித்த அதிரடி உத்தரவு!
நெல்லை: நெல்லையில் மாடுகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த நபர் மீது முட்டியதில் அவர் பறந்து விழ அவர் மீது பேருந்து ஏறி பலியானார். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக பரபரப்பான நகரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. பல சமயங்களில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் மாடுகள் இருந்து வருகின்றன. அந்தவகையில் நெல்லையில் மாடுகளால் பரிதாபமாக ஒருவரின் உயிர் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதராஜ் என்பவர், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார். இருசக்கர வாகனத்தில் அவர் நீதிமன்றத்திற்கு சென்றபோது சாலையில் இரண்டு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளன. அப்போது அந்த வழியாகச் சென்ற வேலாயுதராஜின் வாகனத்தில் மாடுகள் முட்டித் தூக்கியதில், நிலை தடுமாறி விழுந்தார் வேலாயுதராஜ்.
அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து, அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த சிசிடிவி வீடியோ பார்ப்போர் நெஞ்சை பதற வைத்துள்ளது.
மாடுகளால் வாகன விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவதால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்துச் சென்று, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், சாலையில் மாடுகளை திரிய விடுபவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது நெல்லை மாநாகராட்சி நிர்வாகம்.
மாடு வளர்ப்போர் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் மாநகராட்சி நிர்வாகம் அவற்றைப் பிடித்துச் சென்றுவிடும் எனவும் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை மாநகராட்சி ஆணையர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லையில் மாடுகளால் ஒருவர் பலியான சம்பவம் எதிரொலியாக மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்று ஒரே நாளில் நெல்லை மாநகராட்சிப் பகுதி சாலைகளில் உலா வந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றிடன் உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 13,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications