மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை நிர்வாகியாக ஏபிவிபி தலைவர் நியமனம்! மாணவர்கள் போராட்டம்
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாக உறுப்பினராக ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான ஏபிவிபியின் தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என கல்வி நிலையங்களில் வலதுசாரி தலைவர்கள் நிர்வாகிகளாக நியமிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு பள்ளியில் ஆன்மீக பேச்சாளர் என்று தன்னை கூறிக்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் குறித்து மூடநம்பிக்கையாக மகாவிஷ்ணு எனும் இளைஞர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவரது பேச்சை தடுக்க முயன்ற பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகாவிஷ்ணு மிரட்டும் தொனியில் பேசியிருந்தார்.

இவர் வலதுசாரி, இந்துத்துவா கொள்கையை கொண்டவர் என்றும், அவரை அனுமதிக்க பள்ளி நிர்வாகத்திலும், வலதுசாரி நிர்வாகிகள் இருந்ததுதான் காரணம் எனவும் சொல்லப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
இந்த பஞ்சாயத்தை தொடர்ந்து, கல்வி நிலையங்களில் இந்துத்துவா கருத்தியலை கொண்டிருக்கும் ஆட்களை நிர்வாகிகளாக நியமிப்பதற்கு எதிர்ப்பு வலுத்தது. ஆசிரியர்களா, பேராசிரியர்களாக, பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் என்கிற போர்வையில் இவர்கள் மாணவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று திக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இப்படி இருக்கையில் தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஏபிவிபி அமைப்பின் தலைவர் ஒருவர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏபிவிபி என்று அழைக்கப்படும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பானது, கடந்த 1948ம் ஆண்டு யஷ்வந்த் ராவ் கேல்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் தீவிர ஆர்எஸ்எஸ்காரராவார். பாஜகவுடன் கொள்கை முரண் கொண்டுள்ள திமுக, தனது ஆட்சியின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தில் எப்படி ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான ஏபிவிபியின் தலைவரை, பல்கலையின் நிர்வாகியாக நியமிக்கலாம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
தற்போது பல்கலைக்கழகத்தின் சின்டிகேட் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள சவீதா ராஜேஷ், ஏபிவிபியின் தென் தமிழகத் தலைவராக இருக்கிறார். இந்த நியமனம் ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதற்கு இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ (SFI) கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications