யார்தான் கொன்றது.. 100 பேரிடம் விசாரணை.. உமா மகேஸ்வரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு
உமா மகேஸ்வரி கொலை வழக்கு விசாரணையில் மர்மம் நீடித்து வருகிறது
Recommended Video
நெல்லை: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியை கொன்றது யார் என்ற விசாரணை இன்னும் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், திடுதிப்பென்று அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3 நாளுக்கு முன்பு, வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், உமா உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசந்திரன், வீட்டு வேலைக்கார பெண் மாரி ஆகிய 3 பேரையும் ஒவ்வொரு ரூமில் வைத்து கொலை செய்தனர்.
போலீசாரும் 3 தனிப்படை அமைத்து 3 நாளாக கொலையாளிகளை தேடி வருகிறார்கள் போலீசார். உமா மகேஸ்வரி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகை, மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றதால், இது நகைக்கான கொள்ளையாகவே முதலில் பார்க்கப்பட்டது. பிறகு கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
வடமாநிலத்தவர்
இந்த கொலை முன்விரோதமா, சொத்துக்காகவா, அரசியல் விரோதமா, நகை, பணத்துக்காகவா என்ற ரீதியில் கேள்விகள் நாலாபக்கமும் விசாரணை நடந்து வருகிறது. 70 பேரிடம் விசாரணையை ஆரம்பமாகி, கடைசியில் 4 ஆண்கள், 3 பெண்கள் என 7 பேரிடம் போலீசாரின் விசாரணை நடந்த நிலையில், இந்த கொலையை செய்தது வட மாநில ஆட்களாக இருக்குமோ என்று விசாரணை திசை திரும்பியது.
பெண்
ஆனால் நேற்று, பெண் ஒருவர் கொலையாளியாக இருக்க வாய்ப்புண்டு என்ற புது தகவல் வெளியானது. அந்த பெண் கொலையாளியை தேடி மதுரைக்கு ஒரு தனி டீம் விரைந்துள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
சீனியம்மாள்
அந்த பெண் யாராக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் அவர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்தப்பட்டது பல்வேறு அதிர்ச்சியை தந்துள்ளது. திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்தவர்தான் சீனியம்மாள். இவரை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி உமா மகேஸ்வரி பண மோசடி செய்ததாக கூறப்பட்டது. அதனால் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.
விசாரணை
போலீசாரோ, துருவி துருவி இவரிடம் பல கேள்விகளை மடக்கி மடக்கி கேட்டுள்ளனர். அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்த சீனியம்மாள், எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பதாக தெரிவித்தார். இதனால் சீனியம்மாளிடம் நடத்தி விசாரணயில் முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில், உமா மகேஸ்வரியின் சொந்தக்காரர்களிடம் விசாரணை திரும்பி உள்ளதாக சொல்லப்பட்டது
சிபிசிஐடி
சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். மேலும், சொந்தக்காரர்கள் உள்பட 100 பேரிடம் போலீசார் விசாரணை இதுவரை நடத்தப்பட்டது. இந்நிலையில் உமாமகேஸ்வரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு
வீட்டுக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். உயிரிழந்த 3 உடல்கள் விழுந்து கிடந்த இடங்களை போட்டோக்களாக பதிவு செய்து கொண்டனர். இதை பற்றி கேட்டதற்கு, ஏற்கனவே சிபிசிஐடி விசாரணயில் இருக்கிற கொலை, கொள்ளை சம்பவங்களுடன், இந்த கொலை ஒத்துப் போகிறதா என்பதை ஆய்வு செய்யவே வந்ததாக கூறினார்கள்.