நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்த அப்பாவு.. நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கைக்கு ரெடியாகும் அதிகாரிகள்.. பரபர
நெல்லை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே ராதாபுரம் தொகுதி அரசியல் அனல் பறக்க ஆரம்பித்தது.
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது 49 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாவு தோற்றார். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து வெற்றி வாகை சூடினார் அதிமுக வேட்பாளர் இன்பதுரை.
தேர்தல் முடிந்த இத்தனை நாட்களான பிறகும், அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபடவில்லை அப்பாவு. ஏன்.. திமுக தலைமை கூட அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை.
இதையடுத்துதான் உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தரப்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில் ராதாபுரம் தேர்தல் வழக்கில் கடைசி மூன்று சுற்று வாக்குகளை திரும்பவும் என்ன வேண்டும்.. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களால் அட்டஸ்டட் செய்யப்பட்டதால் தேர்தல் அதிகாரிகள் செல்லாது என்று அறிவித்த, 203 தபால் வாக்குகளை, செல்லும் என்று அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடைசி மூன்று சுற்று வாக்குகளை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே எண்ணினார்கள். இதில் அதிக வாக்குகள் பெற்று இன்பதுரை முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாவு தரப்போ தாங்கள் முன்னிலையில் இருப்பதாக கூறி வருகிறது.
ஆனால், 203 செல்லாத வாக்குகளை பொருத்தமட்டில், அது செல்லுமா செல்லாதா என்பதை உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்த பிறகு உயர் நீதிமன்றம் தனது இறுதி முடிவை சொல்ல முடியும் என்ற நிலையில்தான் உள்ளது. எனவே இந்த வழக்கின் முடிவை தங்கள் பக்கம் கொண்டு வர முடியவில்லை என்ற அதிருப்தி திமுக தரப்புக்கு இருக்கிறது.
இந்த நிலையில்தான் நில ஆக்கிரமிப்பு சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் அப்பாவு. ஓடை நிலத்தை ஆக்கிரமித்து அப்பாவு காம்பவுண்ட் சுவர் அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஜூன் மாதம் 15ஆம் தேதி லெப்பை குடியிருப்பு பகுதியில் உள்ள அப்பாவு, மனைவிக்கு வடக்கன்குளம் பாசன பிரிவு உதவி பொறியாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தங்களால் ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற தேதியில் இருந்து 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை நீங்கள் அகற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள தவறினால் அந்த ஆக்கிரமிப்பை நாங்கள் அகற்றுவோம். அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஏற்பட்ட செலவை நான் உங்களுக்கு எதிராக விதிப்பேன் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா காலம் என்பதாலும் அப்பாவுவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சிகிச்சை பெற்ற காரணத்தாலும், அதிகாரிகள் சென்றபோது அங்கு அவர் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவீடு செய்து விட்டு சென்று விட்டார்கள். அரசுக்கு சொந்தமான பொது இடம்.. அதுவும் நீர்வழி போக்குவரத்து இடத்தை அப்பா தனது வீட்டுக்குள் மடக்கி சுற்றி எழுப்பிய சுவர் அதிகாரிகளால் எந்த நேரத்திலும் இடிக்கப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இப்படி ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக ரேஷன் அரிசி மோசடி, எல்ஈடி விளக்கு ஊழல் என்று, அப்பாவு பிரஸ்மீட் வைத்து குற்றம் சாட்டி வருகிறார். இதுதொடர்பாக இன்பதுரை தரப்பில் கூறுகையில், எப்படியும் ஆக்கிரமிப்பு நிலம் இடிக்கப்படுகிறது.. அதுவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்படப்போகிறது என்பதால் அப்பாவு அதிர்ச்சியில் உள்ளார். இதை தவிர்க்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை என்பதால் இப்போது தனது நிலம் ஆக்கிரமிப்பால் இடிக்கப்பட்டது என்ற பெயர் மக்களிடம் பரவி விடக்கூடாது என்பதற்காக, அரசு மீது இல்லாத பொல்லாத புகார்களை சொல்லி வருகிறார்.
அதிகாரிகளால் ஆக்கிரமிப்பு இடம் இடிக்கப்பட்டால், அரசு பழி வாங்கியதாக மக்களிடம் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்வதற்கு அவர் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார் என்கிறார் ஆவேசமாக. மேலும், மறுவாக்கு எண்ணிக்கையில் தான் வென்றுவிட்டதாகவும் இதை ஏற்றுக்கொண்டு இன்பதுரை கையெழுத்திட்டிருப்பதாகவும் மீடியாக்களில் அப்பாவு தொடர்ந்து உண்மைக்கு மாறாக கூறித் திரிவது தவறானது. உள்நோக்கம் கொண்டது.நீதிமன்ற அவமதிப்பும் ஆகும் என்றும் இன்பதுரை கூறுகிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிமுகவில் யார் யார் துடிப்போடு செயல்படுகிறார்களா அந்தப் பட்டியல் திமுக தலைமையால் லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளதாம். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்பதால், இதற்கான அஸ்திரங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தளவில் துடிப்பாக செயல்படக்கூடிய அதிமுக தலைவர்களில் இன்பதுரையும் ஒருவர். எனவே அவருக்கு எதிராக பல்வேறு வியூகங்கள் முன்னெடுக்கப்படுகிறதாம். இதுபோன்ற உரசல்களால், தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது ராதாபுரம் தொகுதி.