''திமுகவுக்கு உயிர் கொடுத்த இஸ்லாமிய சமூகம்''! இப்தார் விழாவில் சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சி!
நெல்லை: திமுக உயிரோட்டமாக இருக்கிறது என்றால் அதற்கு உயிர் கொடுத்த சமூகம் இஸ்லாமிய சமூகம் என சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது ரமலான் மாதம் நடைபெற்று வருவதால் திரும்பிய பக்கமெல்லாம் இப்தார் விழாக்கள் களைக்கட்டி வருகின்றன.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு இதனைக் கூறினார்.
இஸ்லாமியர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்திருப்பதாகவும் இந்த அரசு இஸ்லாமியர்களுக்கான அரசு என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இஸ்லாமிய சமூக மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கக் கூடிய அரசு தான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், பிறருக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதை முஸ்லீம் சமுதாயத்தை பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும் என புகழாரம் சூடினார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் இஸ்லாமிய இளைஞர்கள் ஏராளமானோர் தன்னார்வமாக மனிதாபிமானத்துடன் பங்கேற்றதை சுட்டிக்காட்டி அதற்காக பாராட்டினார்.

இஸ்லாமிய சமுதாயத்தினரின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் என்றும் இன்னும் என்னென்ன கோரிக்கைகள் உள்ளனவோ அவைகளையும் முதல்வர் நிறைவேற்றுவார் என உறுதியளித்தார்.
நோன்பு திறப்பதற்கு முன்னர் நடைபெற்ற சிறப்பு துஆவில் தலையில் தொப்பி அணிந்து கலந்துகொண்ட அவர், துஆ ஓதும் போது இரு கைகளையும் ஏந்தி ஆமின் கூறினார்.












Click it and Unblock the Notifications