போர்க்களமாகும் நெல்லை..தொடரும் மாணவர்கள் மோதல்..மகனை மட்டும் எஸ்கேப் செய்த ஆய்வாளர்.. நடந்தது என்ன?
திருநெல்வேலி: நெல்லையில் தனியார் பள்ளியில் மாணவர் பேரவை தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட மோதலில், ஆதிதிராவிட மாணவர் மீது மாற்று சமூதாய மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் 7 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, 6 மாணவர்களை மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வள்ளியூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த மற்றொரு சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள புதூர் பகுதியில் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பேரவைத் தலைவர் தேர்தல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை மோதலாக மாறிய நிலையில், மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் ஆதிதிராவிட மாணவர் ஒருவர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளி நிர்வாகத்தினர் காயமடைந்த ஆதிதிராவிட மாணவர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதுதொடர்பாக தகவலறிந்த வள்ளியூர் காவல் துறையினர் தாக்குதல் நடத்திய மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவரும் காவல் துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்த 7 மாணவர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், 7 மாணவர்களில் 6 மாணவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு மாணவர் தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளரின் மகன் என்பதால் அந்த மாணவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இதேபோல, நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் பொன்னாக்குடியை அடுத்த மருதகுளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஒருதரப்பு மாணவர்கள் மற்றொரு தரப்பினரை தாக்கியதில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 2 ம் தேதி நெல்லை, நாங்குநேரி, விஜயநாராயணம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே பாட்டிலில் இருந்த தண்ணீரை சிந்தியதற்காக தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டில் இருந்த மாணவரை மற்றொரு மாணவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது. இந்த இரு சம்பவங்களைத் தொடர்ந்து, மாணவர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மோதல் ஏற்பட்டு ஆதிதிராவிட மாணவர் மீது சாதிய ரீதியாக நடத்தப்பட்டுள்ள தாக்குதல் பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஓராண்டில் வள்ளியூரில் மட்டும் மூன்றாவது முறையாக பள்ளி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே தொடந்து வந்த இப்பிரச்னைகள் தற்போது தனியார் பள்ளியிலும் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை மாணவர்களுக்கிடையே 3 மோதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications