ஆளுநர் ரவி, கோட்சே பார்வையில் இருக்கிறார்.. படிச்சிட்டு வந்து பேசணும்.. சீறிய சபாநாயகர் அப்பாவு!
நெல்லை: "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கோட்சேவின் பார்வையில் இருக்கிறார். தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசி வருகிறார். ஆளுநர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் படித்துவிட்டு பேசவேண்டும்." என தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் சபாநாயகர் அப்பாவு மற்றும் நெல்லை எம்.பி ராபர்ட் ப்ரூஸ் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சபாநாயகர் அப்பாவு. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மதச்சார்பின்மை ஐரோப்பாவில் உருவான சித்தாந்தம் எனவும் பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது என்றும் பாரதம் இந்து தர்மத்தின் அடிப்படையில் செயல்படுவதால் மதச்சார்பின்மை இங்கு தேவை இல்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு சாதி மதம், பிறப்பு அடிப்படையில் எந்த வேறுபாடும் காட்டக்கூடாது என்பதையே நமது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 15 மற்றும் 17 கூறுகின்றன.
ஆளுநர் ரவி, கோட்சேவின் பார்வையில் உள்ளார். தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15 மற்றும் 17-ஐ படித்துவிட்டு அவர் பேச வேண்டும்." எனத் தெரிவித்தார்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் காமன்வெல்த் பார்லிமென்ட் கூட்டமைப்பின் இந்திய பிராந்திய 10வது கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார்.
சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்தக் காரணமும் கூறாமல் ஆளுநர் நிறுத்தி வைக்கிறார். மசோதாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போகிறது என தமிழக சபாநாயகர் அப்பாவு பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications