சென்னையை போன்று.. தென்மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி உறுதி.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் தங்கம்!
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிப்காட் மற்றும் எல்காட் பகுதிகளில் தொழிற்சாலைகளை நடத்தி வருபவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதில் சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.

இதன்பின்னர் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:- . தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தென்மாவட்டங்களில் நடத்த முதல்வரோடு ஆலோசனை நடத்தி ஏற்பாடு செய்யப்படும். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை முன்னிலைப்படுத்தி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
புதிய தொழில் தொடங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒற்றைச் சாளர முறை இதுவரை இருந்தது. இனிமேல் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் 2020-21 ஆண்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல் கூட்டுறவு நூற்பாலையான நெல்லை பேட்டையில் உள்ள கூட்டுறவு நூற்பாலை கூட்டுறவு சங்கத்தின் கையில் உள்ளது. விரைவில் அங்கு ஆய்வு செய்து மாற்று தொழில் ஏற்பாடுகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தடுப்பூசியை தமிழகமே தயாரிக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் எண்ணம். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான அனுமதியை வழங்கவேண்டியது மத்திய அரசின் கையில் உள்ளது என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications