தீபாவளி நாளில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? சாமர்த்தியமாக செயல்பட்டு உயிர்களை காத்த பைலட்!
திருநெல்வேலி: தீபாவளி நாளான நேற்று செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. கடையநல்லூர் அருகே தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் இருப்பதை பார்த்த ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளான நேற்று தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் பகுதியில் தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.

தண்டவாளத்தில் பெரிய சைஸில் கல் இருப்பதைப் பார்த்து, உஷாரான பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட், சாமர்த்தியமாக செயல்பட்டு, ரயிலை நிறுத்தினார். பின்னர் தண்டவாளத்தில் இருந்த பெரிய கல்லை அப்புறப்படுத்தினார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர், இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். தண்டவாளத்தின் நடுவே பெரிய கல்லை வைத்தது யார் என்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கடையநல்லுரில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற தண்டவாளத்தில் கல்லை வைத்த சம்பவத்தில் இரண்டு பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட் மற்றும் நட் கழற்றி விடப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் ரயில், லூப் லைனில் சென்று சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்தாலும், நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த ரயில் விபத்தின் பின்னணியில் சதித்திட்டம் இருக்கும் என்ற சந்தேகத்தில் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி நாளில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயிலின் லோகோ பைலட், தண்டவாளத்தில் இருந்த கல்லை கவனிக்காமல் இருந்திருந்தால் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து மிகப்பெரிய விபத்தை சந்தித்திருக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications