ஆட்டநாயகன் ஆகும் "வெளியூர்" ஆட்டக்காரர்? திருநெல்வேலியில் சட்டென உயருது காங்கிரஸ் கை! அப்போ நயினார்?
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் ஸ்டார் வேட்பாளர் தொகுதிகளில் திருநெல்வேலியும் ஒன்று. திருநெல்வேலியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வேட்பாளராக களமிறங்குவதால் அங்கே திமுக கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. இங்கே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.
கடந்த வாரம்தான் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. பாஜக எம்எல்ஏவாக உள்ள நயினார் நாகேந்திரன் நெல்லை லோக்சபா தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ராபர்ட் புரூஸ். அதிமுக சார்பாக இங்கே ஜான்சி ராணி போட்டியிடுகிறார்.

இதில் ஏற்கனவே நெல்லை எம்எல்ஏவாக நயினார் நாகேந்திரன் உள்ளார். ஆலங்குளம் (எம்எல்ஏ பெயர்மனோஜ் பாண்டியன்), அம்பாசமுத்திரத்தில் (இசக்கி சுப்பையா) அதிமுக வசம் உள்ள நிலையில் பாளையங்கோட்டை (அப்துல் வஹாப்), ராதாபுரம் (சபாநாயகர் அப்பாவு) சட்டசபை தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் உள்ளன. நாங்குநேரியில் (ரூபி மனோகரன்) மட்டும் காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளார்.
தூத்துக்குடி குழப்பம்: தொடக்கத்தில் இருந்தே திருநெல்வேலி வேட்பாளர் அறிவிப்பு பல குழப்பங்களோடுதான் சென்றது. உதாரணமாக பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் நெல்லையில் நயினார் போட்டியிடுவதாக அறிவிக்கப்படவில்லை. மாறாக அவர் தூத்துக்குடியில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1 மணி நேரம் கழித்தே அவர் தூத்துக்குடி வேட்பாளர் இல்லை.. நெல்லை வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் லேட்டாக அறிவிப்பு: இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் நெல்லைக்கு வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. முதல்வர் ஸ்டாலின் அன்று மாலை பிரச்சாரம் செய்ய செல்கிறார் என்பதால் பிற்பகலில் அவசர அவசரமாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ராபர்ட் புரூஸ். வழக்கறிஞரான ராபர்ட் புரூஸ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார் ராபர்ட் புரூஸ். 2015ஆம் ஆண்டு முதல் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். நெல்லை தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராபர்ட் புரூஸுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிம்லா மாற்றம்: இன்னொரு பக்கம் நெல்லை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவரை வேட்பாளராக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் களமிறக்கப்பட்டார். அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். ஜெயலலிதாவை எதிர்த்து நின்று தோற்ற சிம்லாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும் என திமுக சார்பில் உறுதியளித்த நிலையில் அவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே விஞ்சியது. இதனால் அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சீட் தரப்படும் என உறுதி அளித்த நிலையிலேயே அவர் அதிமுகவில் இணைந்திருந்தார். அதன்படியே, எடப்பாடி பழனிசாமியும், சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை லோக்சபா தொகுதியில் சீட் வழங்கினார்.
ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்தவர் என்ற பிம்பத்தால் உள்ளூர் அதிமுகவினர் எதிர்ப்பு காரணமாக இவரின் வாய்ப்பு பறிக்கப்பட்டது.
காங்கிரசில் குழப்பம்: இன்னொரு பக்கம் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெளியூர் ஆள் என்பதால் அவருக்கு உள்ளூர் காங்கிரஸ் தலைகள் வேலைகளை பார்ப்பது இல்லை என்கிறார்கள். இவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர். இவரை மக்கள் எதிர்க்கவில்லை என்றாலும்.. ஒன்றிய செயலாளர்கள் சிலர் காங்கிரசில் எதிர்க்கின்றனர். திருநெல்வேலியில் ராபர்ட்க்கு ஆரம்பத்தில் யாரும் திமுகவிலிருந்து உதவி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ராபர்ட்டுக்கு ஆதரவாக எல்லா சர்ச்சுகளிலும் அவருக்கு ஓட்டு போட சொல்லி பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால் உள்ளூரில் காங்கிரஸ், திமுக வேலை செய்யாததால் அவருக்கு எதிராக சூழல் மாறும் நிலை இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் திருநெல்வேலி நிலை.. நேரடியாக சோனியா காதுக்கே சென்றுள்ளதாம்.
அதிமுக ஆட்கள் வேலை: திருநெல்வேலி சிட்டிங் எம்பி ஞான திரவியம். அவரை பற்றி எடுக்கப்பட்ட சர்வேயில் வெற்றி வாய்ப்பு இல்லை.. காங்கிரசுக்கு வாய்ப்பு உள்ளதாக ரிப்போர்ட் சென்றுள்ளது.
இதையடுத்து அந்த தொகுதியை காங்கிரசுக்கு வழங்கியது திமுக. ஆனால் காங்கிரஸ் அங்கு வேட்பாளரை அறிவிக்காமல் முடிந்த அளவு காலம் தாழ்த்தியது. கடைசியில் இரண்டு நாட்களுக்கு முன் அங்கே ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுவார் என்றும் அறிவித்தது.
ஆனால் அவர் நெல்லையே கிடையாது. அவர் கன்னியகுமாரிகாரர். அவரை போய் இங்கே களமிறக்கியது ஏன் என்று திமுகவினர் குமுறி வருகின்றனர். இதனால் அப்செட் ஆன சில திமுக நிர்வாகிகள்.. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ரகசியமாக களப்பணிகளை செய்து வருகின்றனராம்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு எந்த பணிகளையும் செய்யாமல் இவர்கள் தனியாக நயினாருக்கு சில வேலைகளை செய்து வருகின்றனராம்.
இதை கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின்.. இங்கே சிலர் நயினார் நாகேந்திரனுக்கு வேலை செய்வதை கேள்வி பட்டேன். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். சிலர் கூட்டணி கட்சிகளுக்கு வேலை செய்யாமல் இருக்கிறார்கள். இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கூறியுள்ளாராம். முன்னாள் அதிமுககாரர் இவர் என்பதால் இப்போதும் அதிமுகவினர் இங்கே நயினாருக்கு வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்களாம்.
களமிறக்கப்பட்ட அனிதா: திருநெல்வேலியில் திமுக கட்சியில் இருந்து யாரும் ராபர்ட்டுக்கு வேலை செய்யவில்லை என்று சொல்லியதால் சோனியா நேரடியாக ஸ்டாலினிடம் பேசினாராம். இதையடுத்தே அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடியை விட்டுவிட்டு திருநெல்வேலியை நோக்கி செல்ல ஸ்டாலின் உத்தரவிட்டாராம். அங்கே வேலைகளை பார்க்க சொல்லி உத்தரவிட்டு இருக்கிறாராம்.
இதையடுத்து அனிதா ராதாகிருஷ்னன் இப்போது திருநெல்வேலியில் எல்லா தலைவர்களையும் கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தி ராபர்ட்டை ஜெயிக்க வைப்பதற்காக வேலைகள் தீவிரமாக நடத்தி கொண்டிருக்கிறாராம்.
அதனால் காங்கிரசுக்கு தொடக்கத்தில் பின்னடைவாக இருந்த திருநெல்வேலியில் தற்போது சூழ்நிலை கொஞ்சம் சாதகமாக மாறி உள்ளதாம்.
நயினாருக்கு பெரிய சவால்: இப்போது நயினாருக்கு இருக்கும் சவால் எல்லாம் அவர் தாமரை சின்னத்தில் ஜெயிக்க வேண்டும். நெல்லையில் எம்எல்ஏ தேர்தலில் தாமரை சின்னத்தில் வென்றாலும் அவர் அதிமுக கூட்டணியில் இருந்தார். அவர் முன்னாள் அதிமுக நிர்வாகி. இதனால் அதிமுக ஆட்கள் இவருக்கு வேலை பார்த்தனர். இப்போது கூட்டணி இல்லை. இதனால் இரட்டை இலையின் உதவி இன்றி தாமரையை மட்டுமே வைத்து நயினார் செல்வது பெரிய சவால்.
ராகுல் வருகிறார்: இன்னொரு பக்கம் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தியே நேரடியாக 12ம் தேதி வருகிறார். இதனால் ராபர்ட்டுக்கு ஆதரவாக சூழ்நிலை மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர் அனிதா வருகை இப்போது ராகுல் வருகையால் நெல்லையில் நிலைமை மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் கை ஓங்கி உள்ளது?: இப்போதைக்கு இருக்கும் சூழல்படி வெளியூர் ஆள் என்றாலும் ராபர்ட் கையே ஓங்கி உள்ளது. நயினார் இரண்டாம் இடத்தில் நெருக்கமாக வருகிறார். ஜான்சி அதிமுக சார்பாக நின்றாலும் முக்குலத்தோர் வாக்குகள் அமமுக - பாஜக கூட்டணியால் பிரிவதால் இப்போதைக்கு மோதல் திமுக vs பாஜக என்றே உள்ளது.












Click it and Unblock the Notifications