பிரியாணி கடைகளுக்கு போதாத காலம்.. பிரபல ஹோட்டலுக்கு சீல்.. அடுத்தடுத்து தொடரும் அதிரடி ஆக்ஷன்!
திருவள்ளூர்: பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பிரியாணி ஹோட்டலில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்தடுத்து பிரபல பிரியாணி ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் பலரும் சைவத்துக்கு மாறி உள்ளனர். பலர் வீடுகளில் அசைவம் செய்யாவிட்டாலும், ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவதில் விருப்பம் காட்டி வருகின்றனர். ஆனால், தற்போது பிரியாணி கடைகளுக்கு போதாத காலம் நிலவுகிறது என்று கூறும் அளவுக்கு அடுத்தடுத்து பிரியாணி கடைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரபல தனியார் நிறுவனமான எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த பிரியாணி கடைக்கு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ் ஹைதராபாத் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து புகார்கள் எழுந்தன.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பாக உணவு பாதுகாப்பு துறையினர் இந்த பிரியாணி கடையில் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வைத் தொடர்ந்து, தரமற்ற உணவு கண்டறியப்பட்டதால், எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னதாக, கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, அந்தக் கடைக்கு சீல் வைத்தனர். அங்கு பிரியாணி சாப்பிட்ட பலருக்கும், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சீல் வைத்தனர்.
அதேபோல, திருவேற்காடு அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அப்பு என்ற தமிழரசன், அப்பு கடை பிரியாணி' என்ற பெயரில் சென்னையில் பல இடங்களில் உணவகம் நடத்தி வருகிறார். சமூக வலைதளத்தில் பிரபலமான இந்த கடையில், சமையலறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், பிரியாணி தரமற்ற முறையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
தொடர் புகாரையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அப்பு கடை பிரியாணி சமையல் கூடத்திற்கு சீல் வைக்க முயன்றனர். அப்போது கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்து திரும்பி சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வந்து, சமையல் கூடத்திற்கு சீல் வைத்தனர். அடுத்தடுத்து பிரபல பிரியாணி ஹோட்டல்கள் சீல் வைக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications