துணை மின் நிலையத்தில் பயங்கர தீ.. திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு! பரபர!
திருவள்ளூர்: திருவள்ளூர் தாமரைப்பாக்கம் அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இதற்கிடையே மின்சாரம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே வாணியன் சத்திரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து அம்பத்தூர், செங்குன்றம், மணலி, மாதவரம் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழை குறைந்து வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை திடீரென துணை மின் நிலையத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். எனினும் தீயை அணைக்க முடியாமல் அங்கிருந்த இயந்திரங்கள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் சூழ்ந்தது.
இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மின் விநியோகத்தையும் நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த சென்னை அம்பத்தூர், செங்குன்றம், மணலி, மாதவரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு பதிலாக, ரசாயன முறையில் இயந்திரங்களின் மீது பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக வெப்பம் காரணமாக இயந்திரங்களில் தீப்பிடித்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தீ விபத்து காரணமாக அங்கு சேதமடைந்துள்ள இயந்திரங்கள் மாற்றப்பட்டு, விரைவில் மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications