‛‛நண்பர் தான்.. வரம்புபடி நடந்தால் நல்லா இருக்கும்’’.. ஆர்என் ரவியை தாக்கி பேசினாரா ஆளுநர் இல.கணேசன்?
திருவள்ளூர்: ஆளுநர் ஆர்என் ரவி எனது நண்பர். அவர் நல்லவர். வரம்புபடி நடந்தால் எல்லாமே நன்றாக இருக்கும் என நாகலாந்து ஆளுநர் இல கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இல கணேசனின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்த மோதல் தொடர்ந்து வருகிறது. முதலில் நீட் விலக்கு சட்டமசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தது. அப்போது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

சமீபத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி ஏற்கவில்லை.
இருப்பினும் அரசாணை பிறப்பித்து தமிழக அரசு செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர வைத்தது. இதையடுத்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்ட நிலையில் சிலமணிநேரத்தில் அது திரும்ப பெறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான முறைகேடு, ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் தற்போது மோதல் உள்ளது. இதுதவிர ஆளுநர் ஆர்என் ரவி அவ்வப்போது பேசும் சனாதான தர்மம் குறித்த கருத்துக்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் என்பது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபூரியில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழகத்தை சேர்ந்தவரும், நாகலாந்து ஆளுநருமான இல கணேசன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவரை சூழ்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர்.
அப்போது, நாகலாந்தில் அமைதி நிலவ வேண்டும் என சாமி தரிசனம் செய்ததாக இல கணேசன் தெரிவித்தார்'' என்றார். அதன்பிறகு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இல கணேசன், ‛‛ஆர்என் ரவி எனது நண்பர். நல்லவர். நாகலாந்தில் பணிபுரிந்தவர். எனக்கு முன்னோடி. நாகலாந்தில் மிகவும் அருமையாக செயல்பட்டுள்ளதாக ரவி குறித்து மக்கள் பாராட்டுகின்றனர்'' என்றார்.
இந்த வேளையில் ஆளுநர் செயல்பாடு குறித்து வரையறை இருக்கா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு இல கணேசன், ‛‛கடற்கரையோரம் இருக்கிறீர்கள் என்றால் என்ன நம்பிக்கை இருக்கும். கடல் தண்ணீர் மேலே வராது என்பது தான் நம்பிக்கையாக இருக்கும். அதுஅதுக்கு என்று ஒரு வரம்பு இருக்கு. அந்த வரம்புபடி நடந்தால் எல்லாமே நல்லா இருக்கும்'' என்றார்.
இந்நிலையில் தான் இல கணேசன் கூறிய, ‛‛வரம்புபடி நடந்தால் எல்லாமே நல்லா இருக்கும்'' என்ற வார்த்தை தான் தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த வார்த்தைகள் மூலம் இல கணேசன், ஆர்என் ரவியை தாக்கி பேசினாரா? என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications