இன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்!
செங்குன்றம்: ஒருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகிறார்கள் என கமல் விமர்சனம் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில் ஊடகங்களும் தேசிய ஊடகங்களும் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் தேர்வு செய்யும் தேர்தலாகவே சித்தரிக்கின்றனர். இந்த தேசிய நீரோட்டத்தில் துன்புறுவோரின் கதி என்ன என்பதை நிர்ணயிக்கும் ஒரு வேட்பாளரை நீங்கள் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பி வைப்பதுதான் இதன் அர்த்தம்.
நடிகர்
எங்கள் மீது ஏன் குப்பை கொட்டுகிறீர்கள். உங்களுக்கு குப்பையே கொட்ட தெரியாது என்றால் எப்படி அரசு போகிறீர்கள். எருமையை குளிப்பாட்டினாலும் கூட்டம் வரும். அதுபோல்தான் நடிகர், நடிகைகளை மக்கள் பார்க்கிறார்கள் என அதிமுகவினர் கூறுகின்றனர். இவர்களின் கட்சியை தொடங்கியதே நடிகர் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
மக்கள்
நான் அரசியலுக்கு வந்ததே கோபத்தின் காரணமாகத்தான். நான் அரசியலுக்கு வராம இருந்த போது என்னை நீங்கள் சந்தோஷமாகத்தான் வைத்திருந்தீர்கள். ஆனால் அதில் எனக்கு சந்தோஷம் இல்லை. கமல்ஹாசன் வாழ்ந்தான். தன் மக்களுக்காக சில முக்கியமான விஷயங்களை செய்தான், எல்லாரையும் போல் இயற்கை எய்தினான். ஆனால் எங்கள் மனதில் வாழ்ந்து வருகிறான் என நீங்கள் சொல்ல வேண்டும்.
பயணம்
நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு வருந்துகிறேன். ஆனால் இனி வேகமாக விட்டதை பிடிக்க வேண்டும். என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காகத்தான். அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
பிக்பாஸ்
அரசியலில் செலவு செய்ய பணம் வேண்டும் என்பதால் சினிமாவில் நடிக்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். உங்களுக்கு இலவசங்களை எப்படி கொடுக்கிறார்கள், அவங்க அப்பன், பாட்டன் சொத்திலிருந்தா கொடுக்கிறார்கள். அது மக்களின் பணம்.
50 லட்சம் வேலைவாய்ப்பு
இந்த ஏழ்மையின் காரணமாக நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் இந்த ஏழ்மை இப்படி நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை மாற்ற முடியும். 50 லட்சம் வேலைவாய்ப்புகளை நாங்கள் ஏற்படுத்துவோம் என்று சொன்னால் எப்படி கொடுப்பீர்கள் என கேட்கிறார்கள்.
வேலைவாய்ப்புகள்
வேலையே செய்ய பழகாதவர்களுக்கு எப்படி வேலை கொடுக்க வேண்டும் என தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளையெல்லாம் சீர்படுத்த வேண்டும் என்றால் எத்தனை லட்சம் வேலைவாய்ப்புகள் வரும் என யோசித்து பாருங்கள்.
100 பேர்
சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத தொழிற்சாலைகள், ,ஸ்டெர்லைட் போன்று மக்களை கொன்று தொழிற்சாலைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டெர்லைட்டை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் சுட்டுக் கொல்கிறார்கள். 13 பேர்தானே இறந்தார்கள். அன்று மட்டும் விட்டிருந்தால் 1000 பேர் இறந்திருப்பார்கள் என தமிழிசை கூறியுள்ளார்.
குடும்பம்
அப்ப விட்டால் 1000 பேரை கொல்வீர்கள் என்றால் உங்களை விடக் கூடாது. அவர்கள் இந்த பகுதியில் காலடி எடுத்து வைக்கவே விடக் கூடாது. தமிழகத்தில் இனி அவர்கள் வரவே முடியாது. அப்ப திமுக -காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கலாமா என கேட்கிறீர்களா. அவர்களும் 50 ஆண்டுகளாக இருந்தார்கள் என்ன செய்தார்கள். அவர்களது குடும்பத்திற்கு மட்டுமே நல்லது செய்தார்கள். இன்னொருவர் போட்ட இரு இலைகளில் இரண்டு பேர் சாப்பிடுகிறார்கள் என்றார்.