திருமணமாகி வெறும் 4 நாள்..! மறுவீடு சென்ற போது விபத்து! துடிதுடித்து உயிரிழந்த புதுமணத் தம்பதி!
அரக்கோணம்: லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்ததால் காருக்குள் இருந்த புதுமணத் தம்பதி உடல் நசுங்கி அதே இடத்திலேயே இறந்துவிட்டனர். இவர்களுக்கு திருமணமாகி 4 நாட்கள்தான் ஆகின்றன.
Recommended Video
அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (31). இவர் மருந்து விநியோகஸ்தர். தாம்பரம் பெருங்களத்தூரை சேர்ந்த கார்த்திகா (30). இவர் தாம்பரம் தனியார் மருத்துவமனை மருத்துவர்.
இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் 28 ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் பெருங்களத்தூரில் உள்ள கார்த்திகாவின் தாய் வீட்டிலிருந்து அரக்கோணத்தில் மனோஜின் வீட்டிற்கு செல்ல இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர்.

கடம்பத்தூர்
அப்போது திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள மப்பேடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூவம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரக்கோணத்திலிருந்து எதிரே வந்த சிமெண்ட் டேங்கர் லாரி, கூவம் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி கவிழ்ந்தது.

லாரி
இதில் காருக்குள் இருந்த மருத்துவர் கார்த்திகா, அவரது கணவர் மனோஜ் குமார் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் மீது கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர்.

விபத்து
பிறகு காரை உடைத்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 நாளில் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடும்பத்தினர்
இருவரது உடல்களையும் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்த லாரி ஓட்டுநர் தனது வாகனத்தை கண்டபடி இயக்கினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications