வீட்டுல 10 ரூபாய் கூட இல்லை.. இதுல 5 லட்சம் காணோம்னு புகாரா?.. வீட்டு ஓனரை கலாய்த்த திருடர்கள்
திருவள்ளூர்: ரூ 5 லட்சம் கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த வீட்டு உரிமையாளரை திருடர்கள் கலாய்த்து கிண்டல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவள்ளூரை அடுத்த கீழ் நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் வீட்டில் கடந்த 17-ஆம் தேதி பூட்டை உடைத்து 5 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக புகார் எழுந்தது.
ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ரோஜா நடனமாடியதாக வீடியோ.. மார்ஃபிங் செய்த 3 பேரை லபக்கிய போலீஸ்
இதன் அடிப்படையில் மணவாளநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காசிமேடு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (27), திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (40) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருடவில்லை
அப்போது தாங்கள் நகை பணம் எதுவும் திருடவில்லை எனவும் நாங்கள் பூட்டை உடைத்து கொண்டு வீட்டிற்குள் சென்ற போதே வீட்டு உரிமையாளர்கள் குடும்பத்துடன் வந்து விட்டதால் அங்கிருந்து அவசர அவசரமாக வேட்டியை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் அக்கபக்கத்தினர் மற்றும் வீட்டு உரிமையாளர் தங்களை துரத்தி கொண்டு வந்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தப்பிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
போலீஸார் விசாரணை
இதனிடையே வீட்டு உரிமையாளர் ராஜேஷ் என்பவரை நேரில் வரவழைத்து கைது செய்யப்பட்டவர்கள் முன்னிலையிலேயே போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இருவரும், "உங்கள் வீட்டில் பத்து ரூபாய்கூட இல்லை. 5 லட்சம் காணாமல் போனதாக எங்கள் மீது பொய் புகார் அளித்து உள்ளீர்கள். திருட வந்த இடத்தில் என் வேட்டியை விட்டுச் சென்றதுதான் நஷ்டம்" என ஆதங்கத்துடன் திருடர்கள் கூறினர்.
திருடே போகவில்லை
திருடர்கள் வீட்டு உரிமையாளரை கலாய்த்த நிலையில் போலீஸார் வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டு உரிமையாளர் ராஜேஷ், வீட்டிலிருந்து எதுவும் திருடு போகவில்லை என்றும் ரூ 5 லட்சம் திருடு போனதாக பொய் புகார் அளித்ததையும் ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
ஆஜர்படுத்தி
கைது செய்யப்பட்ட இரு கொள்ளையர்கள் மீது கொள்ளை முயற்சி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தனர். ஒரு திரைப்படத்தில் கனவில் ஆட்டை களவாண்டதாக புகார் கூறுவதை போல் இந்த ஹவுஸ் ஓனர் செய்ததை எண்ணி அங்கிருந்தோர் சிரித்தனர்.