சசிகாந்த் செந்தில் மத்திய அமைச்சராவது உறுதி.. அடித்துச் சொன்ன ஆர்.எஸ்.பாரதி
திருவள்ளூர்: திருவள்ளூர் எம்பி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மத்திய அமைச்சராவது உறுதி என திருவள்ளூரில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளுக்கு வரும் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் எம்பி தனித் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி போட்டியிடுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார்.
இவருக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆதரவு திரட்டி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமர் மோடி அவிழ்த்துவிடும் பொய்களை தமிழக மக்கள் நம்பி ஏமாற்றம் அடைய மாட்டார்கள், இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் பிரகாசமாக உள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப் பெரிய வளர்ச்சி கூட்டணியாக ஆதரவு பெற்றிருப்பதால் அதை கொண்டு பிரதமர் மோடிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவ்வும் ஒன்றிணைந்து நடைப்பயணம் சென்றனர், இதனால் அந்த மாநிலத்தில் நிச்சயம் 60 நாடாளுமன்றத் தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும்.
அது போல் பீகார் மாநிலத்திலும் 35 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும். பாஜக இரு இடங்களில் மட்டுமே வெல்லும். மேலும் குஜராத்தை எடுத்துக் கொண்டால் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி வெல்ல வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. எனவே நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 150 முதல் 160 இடங்களில் மட்டுமே வெல்லும்.
அமெரிக்கா கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும் என கூறியிருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடியின் ஆட்சி ஒழிய வேண்டும் என சொல்கிறது. அப்படி என்றால் இந்த முறை பிரதமர் மோடி ஆட்சி தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். இது உறுதியாக நடைபெறும். அது போல் திருள்ளூர் எம்பி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இந்த தேர்தலில் வென்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் போது மத்திய அமைச்சர் ஆவார். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். கர்நாடகா, ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை மிக நீண்ட காலத்திற்கு முன்பே இவர் தொடங்கிவிட்டார். 2009 ஆம் ஆண்டு கர்நாடகா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர் யுபிஎஸ்சி தேர்வுகளில் தேசிய அளவில் 9ஆவது இடத்தை பெற்றார்.
தட்சின கன்னடாவில் மத பயங்கரவாத அமைப்புகளுக்கு மணல் கொள்ளை மூலம் நிதி செல்வதை கண்டறிந்து அதை முழுமையாக தடுத்து நிறுத்தியவர் சசிகாந்த் செந்தில். மத ரீதியிலான மோதல்களையும் தடுத்தவர். 2020 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார் சசிகாந்த் செந்தில், கடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகத்தை வகுத்து கொடுத்தார். பாஜகவின் இந்துத்துவா அரசியலை கடுமையாக எதிர்ப்பவர்.












Click it and Unblock the Notifications