திருவள்ளூரில் கொட்டி தீர்க்கும் கனமழை.. நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்!
திருவள்ளூர்: சென்னையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. ஆனால் இம்மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்படாததால், மாணவர்கள் நனைந்தபடி பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மேற்கு நோக்கி நகர்ந்திருப்பதால் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை மழை பெய்து வருகிறது. மழையின் தீவிரம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்தன.

ஆனால் விடுமுறை குறித்த கோரிக்கையை சென்னை மாவட்ட ஆட்சியர் நிராகரித்தார். சென்னையில் வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என்று கூறியிருந்தார். ஆனால் நேரம் போக போக மழையின் தீவிரம் அதிகரித்திருந்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என ஆட்சியர் அறிவித்தார். இதனால் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் சற்று நிம்மதியடைந்தனர்.
ஆனால் திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாவட்டத்திலும் பள்ளிகளுக்காவது விடுமுறை விடப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் ஆட்சியர் விடுமுறை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதாலும், போக்குவரத்து நெரிசலாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications