சாமி பேர்ல பூஜை.. எடப்பாடி பழனிசாமி பேர்ல! திருத்தணியில் தங்கத் தேர் இழுத்த காயத்ரி.. குறுக்கே திமுக
திருவள்ளூர்: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆறுபடை வீடுகளில் அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருத்தணி முருகன் கோவிலில் அதிமுக மருத்துவர் அணி செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட அதிமுகவினர் தங்க தேரை இழுத்து வழிபட்டனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி முழக்கமிட்டதை திமுகவைச் சேர்ந்த சிலர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர்.சரவணன் ஏற்பாட்டில், முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத் தேர் இழுத்து அதிமுகவினர் வழிபாடு செய்தனர்.

நேற்று மாலை தங்கத் தேர் பவனி நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு தீபாராதனை காட்டப்பட்டதைத் தொடர்ந்து தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது தங்கத் தேரை இழுத்து வழிபாடு செய்ய பணம் செலுத்தியிருந்த அதிமுகவைச் சேர்ந்த காயத்திரி ரகுராம், டாக்டர்.சரவணன் உள்ளிட்ட உபயதாரர்கள் 6 பேரையும் கோயில் நிர்வாகம் சார்பில் அழைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க கேட்டுக் கொண்டனர்.
அப்போது முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் தங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதற்கிடையே உடன் வந்தவர்கள் முருகனுக்கு அரோகரா எனக் கூறி எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கமிட்டனர். தேரடி வீதியில் எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி முழக்கமிட்டதால் அங்கிருந்த சிலர் முருகன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என எப்படி முழக்கமிடலாம் என கேள்வி எழுப்பி அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் பதிலுக்கு பதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தேர்பவனி சிறிது நேரம் நின்றது. தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு பிறகு தேரோட்டம் கோவில் மாடவீதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில் திமுக நிர்வாகிகளே, பக்தர்கள் என்ற பெயரில் திட்டமிட்டு அதிமுகவின் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் திருவள்ளூர் பகுதி அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications