திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர் யார்? தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு சொல்வதென்ன?
திருவள்ளூர்: திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர் அரசின் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச்செயலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே திருவேற்காட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம். பிரசித்திபெற்ற இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

கடந்த மாதம் தேவி கருமாரியம்மன் கருவறையில் உள்ள உற்சவர் கருமாரியம்மன் சிலையில் இருந்த 8 சவரன் மதிப்புள்ள தங்க நகை மற்றும் திருமாங்கல்யம் மாயமானது. இதனைக் கண்ட கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவில் நிர்வாகிகள் நடத்திய முதற்கட்ட விசாரணை கோவிலில் தினக்கூலியாக பணியாற்றும் அர்ச்சகர் சண்முகம் என்பவர் நகைகளை திருடி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கோவில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரில், திருவேற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நகைகளை திருடி பின்னர் மீண்டும் அதை திரும்பவும் வைத்து விட்டதாக கூறினார்.
இதனிடையே, திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், தமிழ்நாடு அரசின் பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்வானவர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இந்த நிலையில், திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிக்கையில்; "வதந்தி: திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மன் நகையை அக்கோயிலின் தற்காலிக அர்ச்சகர் திருடி அடகு வைத்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த பயிற்சிப் பட்டறையில் தேர்வானவர் என்று வதந்தி பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?: கருமாரியம்மன் கோயில் நகையைத் திருடிய தற்காலிக அர்ச்சகர், தமிழ்நாடு அரசின் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பது முற்றிலும் பொய்யானதாகும்.
இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகராக பணியாற்றி வந்தவர், சண்முகம். தனது தந்தை சுப்பிரமணியன் ஐயரிடம் ஆகமப் பயிற்சி பெற்று அதன் அடிப்படையிலேயே பூஜை செய்யும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளார்.
சண்முகம் இக்கோயிலில் பணியாற்றிய போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 57 கிராம் தங்க செயினுடன் கூடிய திருமாங்கல்யத்தைத் திருடி அடகு வைத்துள்ளார். திருமாங்கல்யம் மீட்கப்பட்டு மீண்டும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலி அர்ச்சகரான சண்முகம் மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு 'முதல் தகவல் அறிக்கை' பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச்செயலாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications