ஏன் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது? வாக்குவாதம் முற்றி மின் வாரிய ஊழியரின் மண்டை உடைப்பு!
திருவள்ளூர்: மின்வெட்டு காரணமாக மின் வாரிய ஊழியருடன் நடந்த வாக்குவாதம் முற்றி அவரது மண்டை உடைக்கப்பட்ட நிகழ்வு திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரில் நடைபெற்றுள்ளது.
சமீப நாட்களாக தமிழகத்தில் தலைதூக்கியுள்ள மின் வெட்டு பிரச்சனையால், பொதுமக்களுக்கும், மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்றிரவு கூட திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் மின் தடையை கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தங்கள் ஏற்றி சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
மிரட்டும் மின்வெட்டு! கொதிக்கும் மக்கள்! ஆர்ப்பாட்டம் நடத்தும் ஐடியாவில் அதிமுக! அடுத்தது என்ன?
மின்சாரம் முக்கியம்
மனித வாழ்வோடு இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக மின்சாரம் திகழ்கிறது. இதனால் தான் இன்று அரை மணி நேர மின் தடையை கூட மக்களின் மனம் ஏற்க மறுக்கிறது. இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரில் நேற்று அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருக்கிறது. இதனால் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று மணவாளநகரில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று ஏன் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது என வினவியுள்ளது.
பதில் இல்லை
இதற்கு அங்கு பணியில் இருந்த அதிகாரி முறையான பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் அங்கிருந்த மின் வாரிய ஊழியர் குப்பன் என்பவர், ஏற்கனவே கரண்ட் இல்லை என்கிற ஆத்திரத்தில் இருந்தவர்களை மேலும் சூடாக்கும் வகையில் சில வார்த்தைகளை உதிர்த்ததாக கூறப்படுகிறது.
மண்டை உடைந்தது
இதனால் கோபமடைந்த அந்த அடையாளம் தெரியாத நபர்களை கொண்ட கும்பல் மின் வாரிய அலுவலகத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் ஏட்டிக்கு போட்டியாக பேசிய மின் வாரிய ஊழியர் குப்பனின் தலையையும் பதம் பார்த்திருக்கிறது. மண்டை உடைபட்டு ரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மின் வாரிய ஊழியர் குப்பன், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை போலீஸ் தேடி வருகிறது.
அசம்பாவித நிகழ்வு
இதனிடையே அரசு அலுவலகங்களுக்கு விளக்கம் கேட்டு வரும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் கனிவுடன் பேசி அவர்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அரசு அதிகாரிகளுக்கு இருக்கிறது. நீயென்ன கேட்பது நானென்ன சொல்வது என்கிற நிலையில் இருந்தால் இது போன்ற அசம்பாவித நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
குமரி மாவட்டம்
அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் தடை குறித்து விளக்கம் கேட்க மின் வாரிய உதவி செயற்பொறியாளரிடம் பொதுமக்களில் ஒருவர் தொடர்பு கொண்ட போது, அவர் அமைச்சரை கேளுங்க என சிறிதும் பொறுப்பில்லாமல் பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலானது.