மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களே, அண்ணாமலையார் கோவிலை காத்தது யார்.. ஸ்டாலின் கேள்வி!
திருவண்ணாமலை: மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களுக்கு அண்ணாமலையார் கோவிலை காத்தது திமுக அரசு தான் என்று தெரியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைத்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையிலேயே தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதிய திட்டங்கள் தொடக்கம்
இதனைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், ரூ.70.21 கோடியில் முடிவுற்ற 91 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், 1,71,196 பயனாளிகளுக்கு ரூ.693.09 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரலாற்று சிறப்புகளையும் ஆன்மிக அடையாளங்களையும் கொண்டது திருவண்ணாமலை மாவட்டம். ஜவ்வாது மலை, சாத்தனூர் அணை போன்ற சுற்றுலாத்தலங்களை கொண்ட மாவட்டம் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து திருவண்ணாமலையை தனி மாவட்டமாக உருவாக்கியவர் கருணாநிதி தான். மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. திமுக ஆட்சியில் திருவண்ணாமலை மாவட்டம் புத்தெழுச்சி பெறும்.

ஆன்மிகவாதிகள் மீது விமர்சனம்
அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டின் சொத்து. அதனை கட்டி காத்தது திமுக அரசு தான். அண்ணாமலையார் கோவிலை தொல்லியல் துறை கைப்பற்ற முயன்றபோது அதனை தடுத்தது திமுக அரசு தான். திமுக ஆட்சியில் தான் அண்ணாமலையார் கோவில் பணிகள் நடைபெற்றன. மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இது தெரியாது. ஏனென்றால் அவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல. உண்மையான வியாதிகள், ஆன்மிக போலிகள். ஆன்மிகத்தை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தும் எண்ணம் கொண்டவர்கள்.
Recommended Video

திராவிட மாடல்
ஆனால் நாங்கள் ஆன்மிகத்தை வைத்து அரசியல் நடத்தவில்லை. மக்கள் முன் ஆட்சியையும், கட்சியையும் நடத்துகிறோம். கோவிலுக்கு திருப்பணிகள் செய்வது திராவிட மாடலா என்று கேள்வி எழுப்புகின்றனர். அனைத்துத்துறைகளுக்குமான வளர்ச்சிதான் திராவிட மாடல். ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆன்மிகத்தின் பெயரால் மக்களவை சாதி மற்றும் மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்கு நாங்கள் எதிரி. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது தான் திமுக அரசு. இது தேர்தல் காலம் அல்ல. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய காலம். பொய் கூறி மக்கள் மத்தியில் விளம்பரம் தேடுபவர்களை பற்றி கவலையில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications