கொட்டும் மழை.. நாயன்மார்கள் சிலைகளை பல்லக்கு தூக்கிய சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள்! வெடித்த சர்ச்சை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு, கொட்டும் மழையில் 63 நாயன்மார்கள் சிலையை சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் சுமந்து சென்றிருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பேர் வரை இந்த திருவிழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதற்கான முன்னேற்பாடுகளை தி.மலை மாநகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவரர் உற்சவமும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இன்று 63 நாயன்மார்களின் வீதி உலா நடைபெற்றது.
கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த வீதி உலாவில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் பலரும் நாயன்மார்கள் சிலையை தாங்கி பிடித்தவாறு ஊர்வலமாக சென்றனர். இவர்கள் அனைவரும் அரசு பள்ளி மாணவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் வீதி உலாவில் பங்கேற்க பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்ததா? அல்லது கட்டாயப்படுத்தப்பட்டு இதில் ஈடுபடுத்தப்பட்டார்களா? மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டும் பள்ளி மாணவர்கள் ஏன் பயன்படுத்தப்படுகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நாயன்மார்கள் சிலைகளை பள்ளி மாணவர்கள்தான் சுமந்து செல்கிறார்கள் என்றும், இது தீப திருவிழாவின் ஒரு அங்கம்தான் எனவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications