திருவண்ணாமலை முருகர் மரத்தேரின் சுமைதாங்கி கல்லில் கல்வெட்டு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள முருகர் மரத்தேரின் சுமை தாங்கி கல்லில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் , பாலாஜி சங்கர் மற்றும் உதயராஜா இணைந்து தீபத்திருவிழா நிகழ்வை ஆவணம் செய்த பொழுது முருகர் தேர் அருகே கிடந்த உருளை கல்லில் எழுத்துக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
உருளையாக உள்ள அக்கல்லை மேலும் சுத்தம் செய்து பார்த்த பொழுது அதில் நான்கு வரிகளில் உள்ள கல்வெட்டு தென்பட்டது

திருச்சிற்றம்பலம்
கல்வெட்டு செய்தி : ஸ்வஸ்தஸ்ரீ நல்லுழரன் விளக்கன் திருச்சிற்றம்பலமுடையான் என்று அக்கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் வரும் நல்லூர் என்பது ஊரைக் குறிப்பிடுவதோடு திருச்சிற்றம்பலம் என்ற நபர் அக்கல்லைத் தூண் செய்வதற்குக் கொடையாகத் தந்த செய்தியைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் வரும் விளக்கன் என்பது அவர் தந்தை பெயராக இருக்கக்கூடும். இக்கல்வெட்டின் எழுத்தமைதியை வைத்து இதன் காலத்தை கி.பி 12ம் நூற்றாண்டாகக் கருதலாம்.

கோவில்
சோழர்கள் காலத்தில் கோவில் மற்றும் மண்டப தூண்கள் வட்டவடிவில் அமைக்கப்படும். சில கோவில்களில் தூண்களிலும் கல்வெட்டுக்கள் இடம்பெறுவது வழக்கம். அதுபோல இத்துண்டு கல்லும் ஒரு பெரும் தூணின் உடைந்த பகுதியே ஆகும். இதை வைத்துப் பார்க்கும் பொழுது அண்ணாமலையார் கோவிலில் உள்ள ஒரு தூணோ அல்லது வேறு ஏதேனும் மண்டபத்தைச் சேர்ந்த தூணோ உடைந்து , பின்னாளில் தேரை தாங்கும் கல்லாக உபயோகத்திற்க்கு வந்திருக்கக்கூடும் என்று அனுமானிக்கலாம்.

கல்வெட்டு
இந்த உடைந்த தூணில் உள்ள கல்வெட்டு நான்கு வரியே ஆயினும் , இக் கல்வெட்டு தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். அண்ணாமலையார் கோவிலில் நூற்றுக் கணக்கான கல்வெட்டுக்கள் காணப்பட்டாலும், அவை யாவும் மன்னர்களோ , அல்லது மன்னர்களின் கீழ் பெரும் வணிகர்களோ மன்னர்களின் மெய்க்கீர்த்தியுடன் தானம் அளித்த செய்தியைத் தருகிறது.

சாமானியன்
ஆனால் இக்கல்வெட்டு சாமானியன் ஒருவன் கோவிலுக்குத் தூண் செய்வதற்குக் கல்லைக் கொடையாக வழங்கிய செய்தியைத் தருகிறது. இதன் மூலம் சாமானியர்களும் அக்காலத்தில் அண்ணாமலையார் கோவில் திருப்பணிகளில் பங்குபெற்று தங்களால் இயன்றதைச் செய்துள்ள செய்தியை அறிய முடிகிறது.












Click it and Unblock the Notifications