திருமணம் செய்து வைக்க கூறி டார்ச்சர்! 35 வயது மகனை கல்லை தூக்கி போட்டு கொன்ற தாய்! ஆடிய திருவண்ணாமலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருமணம் செய்து வைக்க கோரி தினமும் குடித்துவிட்டு வந்து தொந்தரவு செய்த மகனை தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். தூங்கிக்கொண்டிருக்கும் போது கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றி மகனை கொலை செய்துள்ளார்.
90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் தற்போதைய காலத்தில் 30 வயதை தாண்டிய பிறகே திருமணம் நடந்து வருகிறது. ஒரு சிலருக்கு 35 வயது ஆகியும் திருமணம் நடைபெறவில்லை என்ற நிலையே இருந்து வருகிறது. இதனால் நமக்கு எப்போது திருமணம் ஆகும் என்று பல 90ஸ் கிட்ஸ்களும் தவித்து வருகிறார்கள்.

ஒருசிலர் எனக்கு எப்போது திருமணம் செய்து வைப்பீர்கள் என்று நேரடியாக பெற்றோரிடமே கேட்டு விடுகிறார்கள். அப்படித்தான் திருவண்ணாமலையை சேர்ந்த 35 வயது நபரும் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடித்துவிட்டு தாயிடம் தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அந்த தாய் பெற்ற மகன் என்றும் பாராமல் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ருக்மனி. இவரது மகன் சுரேஷ். 35 வயதான சுரேஷுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் சுரேஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக தாய் ருக்மனியிடம் கல்யாணம் செய்து வைக்கும்படி சுரேஷ் கேட்டு வந்துள்ளார்.
ஆனால் வரன் எதுவும் அமையவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே சுரேஷ் அடிக்கடி குடிக்க ஆரம்பித்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வந்து தாய் மற்றும் பெரியம்மா பொன்னுத்தாயிடம் தகராறு செய்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் சுரேஷ் எனக்கு எப்போது கல்யாணம் செய்து வைப்பீர்கள் என்று குடைச்சல் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
நாளுக்கு நாள் சுரேஷ் அதிகமாக குடித்துவிட்டு மதுபோதையில் தாயிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ருக்மனி அக்காவான பொன்னுத்தாயுடன் சேர்ந்து மகனை கொன்றுவிட முடிவு செய்துள்ளார். இதற்காக மகன் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அடுப்பில் எண்ணெயை கொதிக்க வைத்து மகனின் முகத்தில், தலையில் ஊற்றியுள்ளனர்.
பெற்ற மகன் என்றும் பாராமல் கொதிக்க கொதிக்க எண்ணெயை தலையில் ஊற்றியுள்ளனர். இதனால் வலிதாங்க முடியாமல் சுரேஷ் கதறி துடித்தார். அப்போதும் விடாத கல் நெஞ்சம் படைத்த தாயும் பெரியம்மாவும் சேர்ந்து கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளனர். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேஷ் துடிதுடித்து பலியானார். அக்கம் பக்கத்தினர் சொன்ன தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர்
சுரேஷின் உடலை மீட்ட போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து பெற்ற மகனை ஈவு, இரக்கமின்றி கொன்ற தாய் ருக்மனி மற்றும் பெரியம்மாவை போலீசார் கைது செய்தனர். கல்யாணம் செய்து வைக்க கோரி டார்ச்சர் செய்த மகனை பெற்ற தாயே கொன்ற சம்பவம் திருவண்ணாமலையை அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications