திருவண்ணாமலை: 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெறையூரை அடுத்த ஆங்குனத்தில் கி .பி 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் , உதயராஜா மற்றும் சரவணன் இணைந்து வெறையூர் பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது , வெறையூரை அடுத்த ஆங்குனம் கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் பலகை சிற்பம் ஒன்று இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த கோபிநாத் அளித்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.
அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார்.

வலது கரம்
எட்டு கரங்களில் தனது மேல் வலது கரத்தில் சங்கும் ஏனைய வலது கரங்கள் முறையே வாள் , அம்பு ஏந்திய நிலையில் கீழ் வலக்கரம் இடையின் மீது ஊறு முத்திரையிலும் , மேல் இடது கரத்தில் சக்கரமும் ஏனைய கைகள் முறையே வில் , கேடயம் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் தனது இடை ஆடையைச் சுருட்டி பிடித்தவாரு காட்டப்பட்டுள்ளது.

இருபுறம் வீரர்கள்
கொற்றவையின் இருபுறமும் இருவீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். ஒரு வீரர் கைகூப்பி வணங்கிய நிலையிலும், மற்றொருவர் நவகண்டம் தரும் வகையிலும் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாரு காட்சி தருகிறது. இக்கொற்றவை சிற்பத்தின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் இது பல்லவர் கலைபாணி என்றும், இதன் காலம் கி.பி எட்டாம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

வயல்வெளி
மேலும் இவ்வூரின் கிழக்கே உள்ள தனது வயல்வெளியில் போர்வீரன் சிற்பம் ஒன்று இருப்பதாகத் ஏழுமலை என்பவர் அளித்த தகவலின் பெயரில் அதனையும் ஆய்வு மேற் கொண்டனர். சுமார் 3 அடி உயரம் உள்ள அச்சிற்பம் சதுர் புஜத்துடன் மேல் இருகரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும் , கீழ் வலக்கரம் அபய முத்திரையில் கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையிலும் உள்ள விஷ்ணு துர்க்கை எனக் கண்டறியப்பட்டது.

சரப்பளி
தலையை ஜடா மகுடம் அலங்கரிக்க ,கழுத்தில் சரப்பளி மற்றும் சவடி அணிந்து , ஆடையாக மார்பு கச்சையும் , இடையிலிருந்து பாதம் வரை ஆடையும் அணிந்து அழகுறக் காட்சி தருகிறது. இச்சிற்பத்தின் ஆடை அணிகலன்களை வைத்து இதன் காலம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்களின் சிற்பமாகக் கருதலாம். சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கொற்றவை இன்றும் வெட்டவெளியில் வெயிலுக்கு மழைக்கும் நனைந்து கொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications