மோடி உருட்டுன உருட்டுல பேட்டி எடுத்தவங்களே ஆடிப்போய்ட்டாங்க.. அடேங்கப்பா.. கிண்டல் செய்த ஸ்டாலின்!
திருவண்ணாமலை: அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பிரதமர் மோடி ஒரு உருட்டு உருட்டியிருக்கிறார், பிரதமரின் உருட்டில் பேட்டி எடுத்தவர்களே ஆடிப்போய்விட்டனர் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
அண்மையில் தமிழ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அமலாக்கத்துறை குறி வைத்து கைது செய்வது பற்றிய விமர்சனத்திற்கு பதில் அளித்தார். அப்போது பேசிய மோடி, "அமலாக்கத்துறை என்ன எங்களால் உருவாக்கப்பட்டதா? சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் PMLA நாங்கள் உருவாக்கியதா? இல்லை. முதலில் இருந்தே அதெல்லாம் இருக்கிறது. ED ஒரு சுதந்திரமான அமைப்பு. அது சுதந்திரமாக வேலை செய்கிறது.

அதை நாங்கள் தடுப்பதும் இல்லை. யார் மீதும் ஏவுவதும் இல்லை. எங்களுக்கு நேரடியாக அமலாக்கத்துறையுடன் எந்த தொடர்பும் இல்லை. யாராக இருந்தாலும் ED-யை பொறுத்தவரை ஒரே நடைமுறை தான். எதிர்க்கட்சித் தலைவர்களின் கைதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஊழலுக்கு எதிரான மோடியின் நடவடிக்கை நிற்காது" என பதில் அளித்திருந்தார்.
மோடி பேட்டியை விமர்சித்த ஸ்டாலின்: இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பேட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரப் பொதுக்கூட்ட மேடையில் பேசுகையில், “சமீபத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வேட்டி-சட்டை எல்லாம் போட்டு, தமிழ்த் தொலைக்காட்சிக்குப் பிரதமர் மோடி பேட்டி என்ற பெயரில் சூட்டிங் செய்திருந்தார்! அதிலாவது உண்மையைப் பேசினாரா?
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்கள் என்று பத்தாண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தேன் என்று சொல்லியிருந்தார் என்றால் 'சபாஷ்' போட்டிருக்கலாம்! கருப்புப் பணத்தை மீட்டுவிட்டேன்! அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் போட்டுவிட்டேன் என்ற சொல்லியிருந்தால், கை தட்டியிருக்கலாம். உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பு செய்துவிட்டேன். விலைவாசியைக் குறைத்துவிட்டேன். நதிகளை இணைத்துவிட்டேன். தமிழ்நாட்டு மீனவர்கள் கைதினைத் தடுத்துவிட்டேன். பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல்படுத்திவிட்டேன் என்று சொல்லியிருந்தார் என்றால் வாழ்த்தி இருக்கலாம்.
மோடி உருட்டிய உருட்டில்: ஆனால், அந்தப் பேட்டியில் இது எதுவும் இல்லையே! தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று நானும் ஒவ்வொரு மேடையிலும் கேட்கிறேனே! பத்தாண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்ன சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அதற்கு பதில் சொல்லவில்லை! அந்தப் பேட்டியை முழுவதுமாக பார்த்தவர்கள், அது நியூஸ் டைமா? இல்லை, காமெடி டைமா? என்று கொஞ்சம் கன்பியூஸ் ஆகிவிட்டார்கள்! ஏன் என்றால், அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கும் - தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று ஒரு உருட்டு உருட்டினார் பாருங்கள்... பேட்டி எடுத்தவர்களே, ஆடிப் போய்விட்டார்கள்!
மாண்புமிகு பிரதமர் அவர்களே... ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனைக் கைது செய்தார்களே... உங்களுக்குத் தெரியாதுதானே? டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்தார்களே... அதுவும் தெரியாதுதானே? காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி, உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை பல்டி அடித்ததே... அதுவும் உங்களுக்குத் தெரியாதுதானே? பாவம் உங்களுக்கு, நாட்டில் I.T. - E.D. - C.B.I. இதெல்லாம், என்ன செய்கிறதென்று தெரியாது! நாங்கள் நம்பிவிட்டோம்.
நாளைக்கு இதையும் சொல்வார்: இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று சொன்னால் - நாளைக்கு உங்களுக்கும் - குஜராத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் நாட்டு மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்! அப்படியெல்லாம் நாட்டு மக்களைத் தப்புக் கணக்கு போடாதீர்கள் என்று மிகுந்த பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!" எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசியுள்ள ஸ்டாலின், "உத்தர பிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றி பேசும் போதே, பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது. இது ஏப்ரல் மாதம்தான், மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும்.
ஜூன் 3 கலைஞர் நூற்றாண்டு நிறைவு, ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம். இந்த தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்துவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இது மாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை மோடி அமைச்சராக வைத்திருக்கிறார்.
சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான். ஆனால், நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்கிறார். மிக்ஜாம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமன், பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார்.
பேரிடர் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஆண்டுதோறும் வழங்கக்கூடிய மாநில பேரிடர் நிவாரண நிதியைக் கொடுத்துவிட்டு, வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுத்தோம் என்று கூறுவது கரகாட்டக்காரன் படத்தில் வரும் அதுதான் இது என்ற வாழைப்பழ காமெடியை நினைவூட்டுகிறது." எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications