அவர்தான் நாத்திகராச்சே! திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கருணாநிதிக்கு சிலை எதற்கு?.. பாஜக எச் ராஜா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாத்திரகான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலை அமைப்பது ஏன் என பாஜக நிர்வாகி எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் வரும் 8ஆம் தேதி 9 அடி உயர கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் பாஜக நிர்வாகி எச் ராஜா திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றார்.
பின்னர் அந்த கோயிலின் அருகே உள்ளே சிவான்ஜி குளத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலின் இடம் ஆக்கிரமிப்பு குறித்து கோயிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எச் ராஜா
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா, லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த பகுதியில் கிரிவலம் வருகிறார்கள். இந்த கிரிவலப் பாதையில் நாத்திகரான கருணாநிதியின் சிலை வைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து இந்து அமைப்புகளை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா நுழைவாயில்
அது போல் அண்ணா நுழைவுவாயில் என்ற பெயரை நீக்கிவிட்டு அண்ணாமலையார் நுழைவாயில் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார். இதையடுத்து ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் நாத்திகரான கருணாநிதிதானே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கோபமடைந்த எச் ராஜா
இதனால் எச் ராஜா கோபமடைந்து நீங்கள் அறிவாலயத்து செய்தியாளரா என கேட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

திரௌபதி முர்மு வெல்வார்
அதற்கு எச் ராஜா கூறுகையில் பாஜக சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு அதிமுக, பாமக , மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே எதிர்க்கட்சி வேட்பாளரின் வாக்கை விட ஒன்றரை மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எச் ராஜா தெரிவித்தார். கிரிவல பாதையில் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளச்சேரியை சேர்ந்த ஜி காரத்திக் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கருணாநிதி சிலை அமைக்க தடை இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications