சுவர் ஏறிய “காவி வேட்டி”.. அதிர்ச்சி வீடியோ! முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் பரபர -தமுமுக புகார்
திருவாரூர்: முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது அதில் பங்கேற்ற நபர் ஒருவர் வீட்டின் சுவற்றில் ஏறும் வீடியோ ஆதாரத்தை காவல்துறையில் வழங்கிய தமமுக அமைப்பினர் புகாரளித்து இருக்கின்றனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அடுத்தடுத்த நாட்களில் விநாயகர் சிலைகளை முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
தமிழ்நாட்டில் குறிப்பாக பொதுமக்கள் அல்லாது இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய இந்துத்துவ அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை முன்னெடுத்து செல்கின்றன.

பலத்த பாதுகாப்பு
மாநிலம் முழுவதும் அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அணிவகுப்பு ஊர்வலத்தை காவல்துறை நடத்தி இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மத மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க உயர்நீதிமன்றமும், அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. பிற மதத்தினருக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

முத்துப்பேட்டை ஊர்வலம்
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நபர் ஒருவர் வீட்டின் சுவற்றில் குதிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நகர தலைவர் முகம்மது அலீம் புகாரளித்து இருக்கிறார்.

கண்டுகொள்ளாத காவல்துறை
அதில், "முத்துப்பேட்டையில் நேற்று நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் காவல்துறை வாக்குறுதி அளித்த நேரத்தை தாண்டியும், செம்படவன்காடு பகுதியிலிருந்து ஊரின் மையப் பகுதிக்குள் சிலைகளை எடுத்துவர அனுமதித்தும், கடும் சத்தத்துடன் கூடிய வெடிகளை வெடித்துக் கொண்டு சென்றதையும் காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது.

சுவர் ஏறிய நபர்
மாலை சரியாக 6.27 மணியளவில் விநாயகர் ஊர்வலம் முத்துபேட்டை பங்களாவாசல் பகுதியை கடக்கும்போது ஊர்வலத்தின் இருபுறமும் எந்தவிதமான போலீஸ் பாதுகாப்பும் இல்லாமல் 200க்கும் மேற்பட்டோர் அடாவடியாக கூத்து கும்மாளம் போட்டு சென்றனர். காவல்துறை பாதுகாப்பு இல்லாததன் விளைவாக ஊர்வலகத்தில் வந்தவர் அப்பகுதியில் உள்ள வீட்டின் சுவர்களில் ஏறி அவர்களை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டார்.

நடவடிக்கை தேவை
அது தொடர்பான வீடியோ இந்த மனுவுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் காணப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என குறிப்பிட்டு உள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications