கரண்ட் இல்லாத குடிசை வீட்டில் படித்து சாதித்த மாணவி.. 5 நாட்களிலேயே வீட்டுக்கு இலவச மின் இணைப்பு!
திருவாரூர்: மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் 2ஆம் இடம் பெற்ற மாணவியின் வீட்டுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த துர்கா தேவி என்ற மாணவி 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து அசத்தினார்.

கொரடாச்சேரி அருகில் உள்ள பத்தூர் சிவன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் துர்கா தேவி. இவருடைய தந்தை மெக்கானிக் ஆகவும், தாய் சுதா இல்லத்தரசியாக உள்ளனர். துர்கா தேவியின் சகோதரர் மணிகண்டன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயது முதலே படிப்பில் ஆர்வமான மாணவியான துர்கா தேவி 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அவர், தமிழில் 96, ஆங்கிலத்தில் 100, கணிதத்தில் 98, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 98 என மொத்தம் 492 மதிப்பெண்கள் எடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்தார்.
மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்த மாணவி துர்கா தேவியின் வீட்டில் மின்சார வசதி கூட இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த பிறகு தங்களது குடிசை வீட்டில் மின்சார வசதி இல்லை என்ற நிலையை பகிர்ந்து கொண்டார் துர்காதேவி.
"நாங்கள் கூரை வீட்டில்தான் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லை. நான் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் விளக்கு வெளிச்சத்தில் தினமும் படிப்பேன். எங்கள் வீட்டிற்கு மின்சார வசதி பெறுவதற்குப் பணம் கட்டி மூன்று மின் கம்பங்கள் அமைக்க வேண்டி இருப்பதால், அதற்கான பொருளாதார வசதி எங்களிடம் இல்லை.
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தின் விளைவாகவே இந்த மதிப்பெண்ணைப் பெற முடிந்தது.
நான் 10ஆம் வகுப்பில் 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து உள்ளேன். இதற்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசியருக்கும், மற்ற வகுப்பாசிரியருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஆசை நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக வேண்டும் என்பதுதான்" எனத் தெரிவித்தார்.
மின்சார வசதி இல்லாமல் படித்து 10 ஆம் வகுப்பில் 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்த அரசுப் பள்ளி மாணவி துர்கா தேவியின் பேச்சு அரசின் காதுகளை எட்டிய நிலையில், அவரது வீட்டிற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவி துர்கா தேவியும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள பதிவில், "மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து திருவாரூர் மாவட்ட அளவில் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 2ஆம் இடம் பெற்றார் கொரடாச்சேரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி துர்காதேவி.
மாணவியின் சாதனையைத் தொடர்ந்து 5 நாட்களுக்குள்ளாகவே மாணவியின் வீட்டிற்கு இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவியின் வீட்டில் கல்வி எனும் ஒளி ஏற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாணவியோடு இணைந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications