திருவாரூர் ஜோதி.. கூடவே இருந்து ஏடாகூடம்.. கோயிலில் எக்குத்தப்பாக சிக்கிய அரசு ஊழியர்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருக்கொள்ளிக்காட்டில் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த கோயிலின் செயல் அதிகாரியாக உள்ளவர் ஜோதி.. இந்த கோயிலில் பணியாற்றும் எழுத்தருக்கு 10 ஆண்டு ஊதிய உயர்வு நிலுவை தொகை இருக்கிறது. இதை பெற்றுத்தர ஒரு லட்சம் லஞ்சம் கேட்டாராம். இப்போது அவர் கைதாகி கம்பி எண்ணி வருகிறார்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கைதானால் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். சஸ்பெண்ட் முடிந்து திரும்பினாலும், வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும். அவர்களின் பதவி உயர்வு கூட பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஓய்வு பெற்றாலும் தண்டனை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலிலும் சிலர் லஞ்சம் வாங்கி கைதாவது தொடர்கிறது.

திருவாரூர் ஜோதி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருக்கொள்ளிக்காட்டில் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் செயல் அதிகாரியாக 40 வயதாகும் ஜோதி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மன்னார்குடி ஒத்தை தெரு ஆனந்த விநாயகர் கோவிலில் கூடுதல் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். பொங்கு சனீஸ்வரர் கோவிலில் எழுத்தராக சசிகுமார்(50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தொகை நிலுவையில் இருந்தது.
ஒரு லட்சம் கேட்டார்
நிலுவைத்தொகையை வழங்கும்படி சசிகுமார், செயல் அதிகாரி ஜோதியிடம் கேட்டு வந்தார். அதன்படி ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஜோதி கேட்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிகுமார் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
ஜோதி கைது
இதனையடுத்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 1 லட்சம் ரூபாய் நோட்டுகளை செயல் அதிகாரி ஜோதியிடம் வழங்கும்படி சசிகுமாரிடம் கூறினார்கள். அதன்படி நேற்று செயல் அதிகாரி ஜோதி, மன்னார்குடி ஒத்தை தெரு ஆனந்த விநாயகர் கோவிலில் பணியில் இருந்தபோது அவரிடம், ரசாயனம் தடவிய பணத்தை சசிகுமார் கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையிலான போலீசார் ஜோதியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ராணிப்பேட்டை
திருவாரூர் போல் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.அரக்கோணத்தில் 3 மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகாரில் கையும் களவுமாக சிக்கி கைதாகி உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்மனூர் துரைசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்பவர் தனது வீட்டின் அருகில் கடை ஒன்றை அமைத்துள்ளார்.
மின் இணைப்பு
அதற்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவதற்கு சரவணன் அரக்கோணம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாராம். அந்த இணைப்பை வணிக இணைப்பாக மாறுதல் செய்வதற்கு உதவி செயற்பொறியாளர் புனிதா, போர்மென் புல்கிஸ் பேகம், வணிக ஆய்வாளர் மோனிகா ஆகியோர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கேட்டனர்
அதன்படி முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை சரவணன் கொடுத்து இணைப்பை மாற்றும்படி கேட்டாராம். அப்போது மீதம் உள்ள ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே இணைப்பை மாற்ற முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தார்களாம். மேலும் மீதமுள்ள பணத்தை நேற்றைக்குள்( ஏப்ரல் 3) தர வேண்டும் என நிர்பந்தம் செய்தார்களாம். இதனால் கோபம் அடைந்த சரவணன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை சரவணனிடம் கொடுத்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார்கள்.
3 பெண் அதிகாரிகள் கைது
அதன்படி அலுவலகத்தில் இருந்த உதவி செயற்பொறியாளர் புனிதா, போர்மென் புல்கிஸ் பேகம், வணிக ஆய்வாளர் மோனிகா ஆகிய 3 பெண் அதிகாரிகளிடம் சரவணன் பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அடுத்தடுத்து அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications