கமலா ஹாரிஸ் வென்றால் அன்னதானம்! கொண்டாட்டத்திற்கு தயாராகும் திருவாரூர் மக்கள்!
திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கருத்துக் கணிப்புகளில் இவரது வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கமலா வெற்றி பெற்றால் அதை சிறப்பாக கொண்டாட அவரது கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் வருகிறது. தற்போது அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைந்திருக்கிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. குடிரயரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் பைடனும் களமிறக்கப்பட்டனர். ஆனால் வயது மூப்பு காரணமாக பைடனால் தேர்தல் பிரசாரத்தில் வீரியமாக பங்கெடுக்க முடியவில்லை. தடுமாற்றம், பேச்சில் தெளிவின்மை போன்றவை அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு பதில், துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அதற்கு முன்னர் வரை டிரம்புக்கு சாதகமாக இருந்த மக்கள் அலை, தற்போது கமலாவுக்கு ஆதரவாக எழுந்திருக்கிறது. இவர் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் தெற்காசிய கருப்பின அதிபர் என்கிற பெருமையை அடைவார். அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரும் கமலாவுக்கு பெருமளவில் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால், டிரம்புக்கும் வாக்கு வங்கி பலமாக இருக்கிறது.
நேற்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது கருத்துக்கணிப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதில், கமலாவுக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
மறுபுறம் கமலா வெற்றிப்பெற அவரது சொந்த கிராமத்தில் மக்கள் சிறப்பு வழிப்பாடுகளை நடத்தி வருகின்றனர். அதாவது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை ஒட்டி உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில்தான் கமலாவின் தாத்தா, பாட்டி வாழ்ந்திருக்கின்றனர். இங்குள்ள சாஸ்தா கோயிலுக்கு கமலா ஹாரிஸ் நன்கொடை உட்பட ஏராளமான உதவிகளை கடந்த காலங்களில் செய்திருக்கிறார். இதனை நினைவு கூர்ந்துள்ள கிராம மக்கள், நம்மூர் பெண் அமெரிக்க தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்காக ஊர் கவுன்சிலர் சார்பில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டிருக்கிறது. கமலா வெற்றி பெற்றால் கோயில் சார்பில் ஊருக்கு அண்ணதானம் போடப்படும் என்றும் கவுன்சிலர் தெரிவித்திருக்கிறார். கமலாவின் வெற்றியை அமெரிக்கா மட்டுமல்ல துளசேந்திரபுரமும் சிறப்பாக கொண்டாட காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications