கோடி கோடியாக கொட்டும் ஏழுமலையான் கோவிலில்.. சில்லறைகளால் ஏற்பட்ட சிக்கல்.. இப்படி ஒரு பிரச்சனையா?
திருப்பதி: கோடி கோடியாக பணம் கொட்டும் திருப்பதி கோவிலில் சில்லறை நாணய காசுகளால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் மிகவும் பணக்கார கோவில்களில் திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் திருப்பதி கோவில் தினம் தினம் கோடி கோடியாக வருமானம் ஈட்டும் கோவில் ஆகும்.
இங்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை, உண்டியல் வரவு, சிறப்பு நகை வைர காணிக்கை, வரிசை கட்டணம், நிதி உதவி மூலம் பல கோடிகளை திருப்பதி ஏழுமலையான் கோவில் வருமானமாக பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் குறைந்திருந்த வருமானம் தற்போது மீண்டும் அங்கு அதிகரித்துள்ளது.

வருமானம்
இந்த நிலையில் திருப்பதி கோவிலில் பெருகும் சில்லறை நாணயங்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கோவிலில் தினமும் 30 லட்சம் ரூபாய் வரை சில்லறை நாணயங்கள் உண்டியலில் போடப்படுகிறது. இதை தனியாக பிரித்து எண்ணுவதே மிகப்பெரிய வேலையாக உள்ளது. தினமும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உண்டியலில் அதிக அளவில் சில்லறை காசுகளை போடுகிறார்கள்.

சில்லறைகள்
தினமும் இப்படி வரும் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சில்லறை காசுகள் பொதுவாக வங்கிகளில் கொடுக்கப்பட்டு வந்தது. வங்கிகளில் காசுகள் கொடுக்கப்பட்டு பணமாக மாற்றப்பட்டு கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. ஆனால் சமீப நாட்களில் அதிக அளவில் சில்லறைகள் வருவதால் அதை வங்கிகள் வாங்க மறுக்கின்றன. இவ்வளவு சில்லறைகளை பெற்றுக்கொள்ள முடியாது என்று வங்கிகள் மறுத்து வருகின்றன.

வங்கிகள் அறிவிப்பு
இதனால் தேவஸ்தானத்தில் தற்போது சில்லறைகள் இருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. வங்கிகள் ஏற்க மறுப்பதால் இதை என்ன செய்வது என்று தெரியாமல் திருப்பதி தேவஸ்தானம் குழப்பத்தில் உள்ளது. மூட்டை மூட்டையாக அலுவலகத்தில் சில்லறைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. தினசரி கோவில் செலவினங்கள், கோவிலுக்கு சொந்தமான பிரசாத கடைகள், தேவஸ்தான விடுதிகளில் இந்த சில்லறைகளை இனி பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

முடிவு
பிரசாத கடைகள், தேவஸ்தான விடுதிகள் போன்ற இடங்களில் மக்களிடம் கொடுக்கப்படும் மீதி பணத்திற்கு பதிலாக சில்லறை காசுகளை கொடுக்க உள்ளனர். 1000 ரூபாய் மீதம் கொடுக்க வேண்டும் என்றாலும் அதற்காக சில்லறை நாணயங்களை கொடுக்கும் முடிவை தேவஸ்தானம் போர்டு எடுத்துள்ளதாம். கோடி கோடியாக பணம் கொட்டும் திருப்பதி கோவிலில் இப்படி சில்லறை காசுகளால் சிக்கல் ஏற்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications