மோடி நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்து : எஸ்.பி வேலுமணி, சபாநாயகர் தனபால் பாதுகாப்பு வாகனங்கள் சேதம்
தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணியின் வாகனங்கள் விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 கார்கள் சேதமடைந்த நிலையில் டிரைவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது
திருப்பூர்: பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சபாநாயகர் தனபாலின் பாதுகாப்பு வாகனங்கள் தாராபுரம் அருகே விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 3 வாகனங்கள் சேதமடைந்தன. கார் டிரைவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து மோடி இன்று தாராபுரத்தில் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தாராபுரம் வேட்பாளர் எல். முருகன் உள்ளிட்ட 13 வேட்பாளர்களை ஆதரித்து மோடி வாக்கு சேகரிக்க உள்ளார். மோடி வருகையை முன்னிட்டு தாராபுரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மோடியுடன் ஒரே மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பங்கேற்று பேச உள்ளனர். இதற்கான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சபாநாயகர் தனபால் ஆகியோர் கார் மூலம் கோவையில் இருந்து தாராபுரத்திற்கு சென்றனர்.
தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணியின் வாகனங்கள் விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 கார்கள் சேதமடைந்தன. கார் டிரைவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காயமடைந்த கார் டிரைவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.