காமராஜருக்கு பின் வந்த யாரும் விவசாயத்துக்கு ஒன்னும் செய்யல.. அதிமுகவை மீண்டும் சீண்டும் அண்ணாமலை?
திருப்பூர்: காமராஜருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் விவசாயத்துக்கு எதுவும் செய்யவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். காமராஜர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிக காலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. ஆக, அண்ணாமலை மறைமுகமாக அதிமுகவையும் விமர்சித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நேற்று திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை சென்று மக்கள் மத்தியில் பேசினார் அண்ணாமலை. திமுக அரசு, எத்தனை டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்றுதான் யோசிக்கிறது என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு 2000 டாஸ்மாக் கடைகள் இருந்தன, இன்று, 5500 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன என்றும் விமர்சித்துப் பேசியுள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை பேசுகையில், "பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், எத்தனை அணை கட்டலாம் என்று யோசித்து. ஒன்பது ஆண்டுகளில் 12 அணை கட்டினார். அதில் ஒன்று அமராவதி அணை. 60,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. ஆனால் திமுக, எத்தனை டாஸ்மாக் கடை திறக்கலாம் என்று யோசிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2000 டாஸ்மாக் கடைகள் இருந்தன, இன்று, 5500 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. கர்மவீரர் காமராஜருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் விவசாயத்துக்கு எதுவும் செய்யவில்லை. திமுக இன்று ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக கட்டியது வெறும் 5 அணைகள்.
விவசாயத்துக்கு அணை தேவை என்று நாம் நினைப்போம். ஆனால், திமுகவுக்கு அணை கட்டாமல் இருந்தால் தான் மணல் அள்ள முடியும். தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மணல் அள்ளுகிறார்கள். மணல் திருட்டைத் தடுக்கும் அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். கொலையும் செய்கிறார்கள். தமிழகமெங்கும், கிராம அலுவலர்கள் துப்பாக்கி லைசன்ஸ் கேட்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியிருக்கிறது.
நரேந்திர மோடி மூன்றாவது முறை வருவதற்கு இங்கு கூடியிருக்கும் கூட்டமே சாட்சி. மத்தியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் ஆட்சி. குடும்ப ஆட்சி நடந்தது. 2004 - 2014 பத்து ஆண்டுகளில் இந்திய வரலாற்றில் பார்க்காத ஊழல் ஆட்சி நடந்தது. திமுக உள்ளிட்ட கட்சிகள், மத்திய அரசில் இருந்து கொண்டு எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைக்கு நமது நாட்டை சுரண்டினார்கள். ஆனால் இன்று உறுதியான, உலகமே திரும்பிப் பார்க்கும் தலைவரான நரேந்திர மோடி அவர்களைப் பிரதமராகப் பெற்றிருக்கிறோம். லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி கொடுக்க முடியும் என்பதை நமது பிரதமர் நிரூபித்திருக்கிறார்.
ஏழைப் பங்காளன் தலைமையில் ஏழை மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு திட்டமும் மக்கள் வீட்டு வாசலுக்கே வருகிறது. ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், மருத்துவக் காப்பீடு, தூய்மை இந்தியா திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை என சாமானிய மக்களுக்கான அரசு நடைபெறுகிறது. 2014 ஆம் ஆண்டு, உலகப் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, இன்று 5 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மோடி தலைமையில் இன்னும் மூன்று ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் 3 ஆவது பெரிய நாடாக முன்னேறும். நமது பாரதப் பிரதமரின் நல்லாட்சியில், 2047 ஆம் ஆண்டு, உலகத்தில் முதன்மை நாடாக இந்தியா வரும்.
2004 - 2014 ஆண்டுகளில் ஊழல் மிகுந்த ஆட்சி நடத்திய திமுக உள்ளிட்ட சந்தர்ப்பவாத எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்று கூடி 'இந்தியா' கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அதன் பிரதமர் வேட்பாளர் யாரென்று அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை. அவர்களிடம் ஆட்சி சென்றால், இந்தியாவைக் கூறு போட்டு விற்பார்கள். திருட்டு திமுக நமது பிரதமர் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. மோடி அவர்களை ஊழல்வாதி என்று சொன்னால், இந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
2019 ஆம் ஆண்டு வைத்த ரபேல் ஊழல் பொய்க் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி அடைந்தது. திமுகவுக்கு வரலாறு காணாத தோல்வி என்று ஒன்றும் இல்லை. தோல்வி வரலாறு பழக்கப்பட்ட கட்சிதான் திமுக. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முதல் ஐந்து ஆண்டுகள் ஏழை மக்களுக்கான ஆட்சி. இரண்டாவது ஐந்து ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கான ஆட்சி. மூன்றாவது முறை, நம் அடுத்த தலைமுறைக்கான ஆட்சியாக அமையும். 2024 பாராளுமன்றத் தேர்தல், நமது நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆட்சியாக அமையப் போகும் தேர்தல்.
நமது நாடு தொடர்ச்சியாக முன்னேற வேண்டுமென்றால், ஊழலற்ற, கம்பீரமான, வலிமையான, உண்மையான நல்லாட்சி தரக் கூடிய தலைவர் மோடி மட்டும் தான். இதுவரை, எந்தப் பிரதமருமே கொடுக்காத சிறப்பை, தமிழுக்கு நமது பிரதமர் மோடி அவர்கள் கொடுத்திருக்கிறார். தமிழ் கலாச்சாரத்துக்கு மரியாதை கொடுத்திருக்கிறார். தமிழ் இந்தியாவின் மொழி என்று பெருமையுடன் உலக அரங்கில் கூறியிருக்கிறார். ஐநா சபை வரை தமிழின் பெருமை ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு மரியாதை கொடுக்கவில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் இருந்து 39 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொடுத்து நமது பிரதமர் மோடி அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தல், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்கும் தேர்தல் மட்டுமல்ல. ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சி நடத்தும் திமுக அரசை அகற்றவும் இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்." என அண்ணாமலை பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications