மக்களுக்கு பாதுகாப்பு 'இல்லாத' இடத்தில் 'சின்னத்தம்பி' விடப்படும்.. அமைச்சர் என்ன சொல்றார் புரியுதா?
Recommended Video
கோவை: ஊருக்குள் உலா வரும் சின்னதம்பி யானையை விரைவில் பிடித்து, மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் விடப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து சூழியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று கஜ யாத்ரா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதன் துவக்க விழாவில் வனத்துறை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.
காட்டுயானை சின்னதம்பி
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடாகம் பகுதியில் பிடிக்கபட்ட சின்னதம்பி காட்டுயானை டாப்சிலிப் வனத்தில் விடப்பட்டது. ஆனால், யானை தற்போது பல கிலோமீட்டர் தூரம் கடந்து பொள்ளாச்சி, உடுமலை போன்ற பகுதிகளில் வலம் வருகிறது.
கும்கியாக மாற்றப்படும்
இந்த யானையை கூண்டில் அடைத்து கும்கியாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. இந்த யானையைக் பிடிக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், பொள்ளாச்சி ஜெயராமனும் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் மீண்டும் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வழிகள் ஆய்வு
பின்னர், நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னத்தம்பி யானையைக் பிடிக்கும் வழிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், யானையை மீண்டும் பிடிக்கும் பணி விரைவில் துவங்கும் என்றும் கூறினார்.
பாதுகாப்பு இல்லாத இடம்
சின்னதம்பி யானை விரைவில் பிடிக்கப்படும், வேலி போட்டு அடைத்து, மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் விடப்படும் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.