சிட்டாவில் பெயர் மாற்றம்.. 2.25 ஏக்கர் நிலம் பட்டா.. கவிதாவுடன் சேர்ந்து தலைகுனிந்த திருப்பூர் விஏஓ
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலத்தை கார்த்திகேயன் என்பவர் வாங்கியிருக்கிறார்.. அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்க்க வேண்டியிருந்ததால், இதற்கான விண்ணப்பத்தையும் அனுப்பிவைத்திருக்கிறார். மேலும், விண்ணப்பம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார். அப்போதுதான், இந்த சம்பவம் நடந்தது.
தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச சம்பவங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. இதனால் கையும் களவுமாக சிக்கி, அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கைதாகி வருகிறார்கள்.

சாதி சான்றிதழ் கோரியும், பட்டா கோரியும், நிலம் அளவீடு, உதவித்தொகை என எண்ணற்ற உதவிகளை கேட்டு விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல நேரிடும்போது, அவர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே அதிகாரிகளுக்கு போன் செய்து புகாரை தந்துவிடுகிறார்கள். இந்த புகாரையடுத்து, அதிகாரிகளும் ஸ்பாட்டுக்கு கிளம்பி வந்து, சம்பந்தப்பட்டவர்களை கையும் களவுமாக கைது செய்கிறார்கள். இதில் விஏஓ, தாசில்தார், முதல் பெண் அதிகாரிகள் வரை சிறை செல்வது வேதனையை தந்து கொண்டிருக்கிறது.
கலால் வரித்துறை அதிகாரி
4 நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்தது.. திருச்சியை சேர்ந்த கணேசன் (வயது 58) என்பவர், விருதுநகர் மாவட்டத்தில், கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட தனியார் மெத்தனால் ஆய்வகங்கள் மற்றும் பார்களில் மது விற்பனை செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் உதவி ஆணையர் கணேசனை கையும் களவுமாக பிடிக்கத் திட்டம் தீட்டினர். இதற்காக டியூட்டி முடிந்து கணேசன் காரில் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழிமறித்தனர். அவரது காரில் ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.. தனியார் மது விற்பனைக்கூடங்களிலும் மெத்தனால் ஆய்வகங்களிலும் இந்த பணத்தை லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.
சிட்டாவில் பெயர் சேர்ப்பு
இந்த அதிர்ச்சி சம்பவம் முடிவதற்குள் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் விஏஓ லஞ்சம் வாங்கி சிக்கியிருக்கிறார்.. திருப்பூர் மாவட்டம் அவிநாசி முருகம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்.. 42 வயதாகிறது.. சமீபத்தில் ஊத்துக்குளி வட்டம் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலத்தை இவர் வாங்கியிருக்கிறார்.. அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக, இடையபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு கார்த்திகேயன் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், பட்டா பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் பிரபு (44) மற்றும் அவரது உதவியாளர் கவிதா (36) இருவரும் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம்.. இதனை கொடுக்க விரும்பாத கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் அளித்துவிட்டார். அதன்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, கார்த்திகேயனிடம் போலீஸார் கொடுத்தனர்.
அதிரடி கைது - சஸ்பெண்ட்
அதை, கிராம நிர்வாக அலுவலர் பிரபு, கவிதாவிடம் கார்த்திகேயன் தந்தார்.. அப்போது அவர்கள் இருவரையும் கையும் களவுமாக திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
அதுமட்டுமல்ல விஏஓ பிரபுவை திருப்பூர் ஆர்டிஓ மோகனசுந்தரம் மற்றும் உதவியாளர் கவிதாவை ஊத்துக்குளி தாசில்தார் முருகேஸ்வரன் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துஉத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications