"முழு திருப்தி.." வட மாநிலத்தவர் விவகாரம்.. ஒரே வார்த்தையில் நறுக்கென சொன்ன பீகார் அதிகாரிகள் குழு
வட மாநில தொழிலாளர்கள் வதந்தி விவகாரத்திலே பீகார் அதிகாரிகள் குழு திருப்பூரில் ஆலோசனை நடத்தினர்.
திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என்று இணையத்தில் பொய்யான தகவல்கள் பரவிய நிலையில், இன்று திருப்பூரில் பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிகாரிகள் குழு பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக இணையத்தில் சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இணையத்தில் தீயாகப் பரவிய இந்த வீடியோக்களால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
இது வதந்தி என்று தமிழ்நாடு அரசும் சரி, பீகார் அரசும் சரி விளக்கமளித்துள்ளது. இந்தச் சூழலில் பீகாரில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள அதிகாரிகள் குழு, திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

பொய்யான தகவல்கள்
அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகப் பொய்யான தகவல் பரவியது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்தி பேசியதால் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக எல்லாம் 100% பொய்யான தகவல்களைப் பரப்பினர். இந்த விவகாரத்தில் உடனடியாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு போலீசார், தொடர்ந்து இந்த விவகாரத்தில் விளக்கமளித்து வருகிறது. மேலும், பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் ஆய்வு
இதில் தொடர்புடைய பாஜக நிர்வாகியைக் கைது செய்யப் பீகாருக்கும் போலீசார் விரைந்துள்ளனர். அதேபோல இணையத்தில் பரவிய இதுபோன்ற போலி வீடியோக்கள் பீகாரிலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்து அதிகாரிகள் குழு தமிழ்நாடு விரைந்தனர். நேற்று சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அந்த அதிகாரிகள் குழு, இன்று திருப்பூரில் நேரடியாகவே வட மாநில ஊழியர்களைச் சந்தித்துப் பேசினார்.

நடவடிக்கை
இந்த விவகாரத்தில் பரவும் வதந்திகள் குறித்து வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திருப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து நிறுவனங்களுக்கும் சென்றும் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வதந்தி குறித்த விழிப்புணர்வு அனைத்து வட மாநில தொழிலாளர்களிடம் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை
இதற்கிடையே இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் அதிகாரிகள் குழு, "திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று சென்னையில் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். மேலும், பீகார் அசோசியேஷன் உட்பட பல அசோசியேஷன் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினோம். இன்று நாங்கள் திருப்பூர் வந்துள்ளோம். இங்கும் மாவட்ட அதிகாரிகள், போலீசார், பல அசோசியேஷன் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.

நடவடிக்கை
தொழிலாளர் யூனியன் தொடங்கி பலரிடம் பேசினோம். பழைய மற்றும் போலி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். இது உண்மையாக இருக்குமோ என்று சிலர் அஞ்சியதால் சில வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்தனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் போலி செய்திகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் சென்று இது குறித்து விளக்கமளித்து வருகின்றனர். தனிப் பிரிவு உருவாக்கியுள்ளனர். உதவி மையம் உருவாக்கியுள்ளனர். போலி செய்திகளைப் பரப்பியோர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

பதற்றம் குறைகிறது
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் பதற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. பீகாரில் இருந்து வந்து வேலை செய்யும் ஊழியர்களையும் சந்தித்துப் பேச உள்ளோம். அவர்கள் தரும் தகவல்களைத் திருப்பூர் நிர்வாகத்திற்குத் தெரிவிப்போம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும் திருப்பூர் நிர்வாகமும் இதுவரை எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. இதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications