1 மாதம் தான் இ.எம்.ஐ. பாக்கி! அத்துமீறிய தனியார் நிதிநிறுவன ஊழியர்கள்! வெளுத்துவிட்ட பொதுமக்கள்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு மாதம் இ.எம்.ஐ. செலுத்தவில்லை எனக் கூறி வீட்டிலிருந்த பொருட்களை வீதியில் தூக்கி வைத்த எக்விடாஸ் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை பொதுமக்கள் கேள்விக்கணைகளால் வெளுத்துவிட்டனர்.
ஒரு மாதம் இ.எம்.ஐ. பாக்கி இருந்தால் இப்படித்தான் செய்வீர்களா என்றும் ரிசர்வ் வங்கி இப்படித்தான் விதிமுறைகள் வகுத்துள்ளதா எனவும் கேட்டு நிதி நிறுவன ஊழியர்களை விழிபிதுங்க வைத்தனர். இதனிடையே பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கந்துவட்டி வசூலை போல் இ.எம்.ஐ. வாங்க வந்த நிதி நிறுவன ஊழியர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரித்ததுடன் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. 75 வயதான இவர் தனது மனைவி மற்றும் பேரன்களுடன் செந்தூர் காலனியில் வசித்து வருகிறார். இவரது பேரன் தினேஷ்குமார் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஈக்விடாஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் பெற்று புது வீடு கட்டியிருக்கிறார்.
இந்நிலையில் மாதந்தோறும் இ.எம்.ஐ.ஐ முறையாக கட்டப்பட்டு வந்த நிலையில் மருத்துவச் செலவு காரணமாக ஒரு மாதம் மட்டும் இ.எம்.ஐ. தொகையை கட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் என்ற பெயரில் கந்தசாமி வீட்டுக்குச் சென்ற குண்டர்கள் முதியவர் என்று கூட பாராமல் கந்தசாமியை அவர் அமர்ந்திருந்த நாற்காலியுடன் சேர்த்து தூக்கி வந்து வாசலில் அமர வைத்துள்ளனர்.
அதேபோல் வீட்டினுள் உள்ள பொருட்களையும் அவர்கள் எடுத்து வெளியே வைத்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் இது எந்த ஊரு நியாயம்ங்க எனக் கேட்டு நிதி நிறுவன ஊழியர்களை கேள்விக்கணைகளால் வெளுத்து வாங்கினர். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவர்கள் விழிபிதுங்கி நின்ற நிலையில், காவல்துறையினரும் ஸ்பாட்டுக்கு சென்று நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தி எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
கொடுத்த கடனைக் கேட்பதற்கு என்று வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கு சில வரைமுறைகள் உள்ளன. ரிசர்வ் வங்கியின் வரைமுறைகளை காற்றில் பறக்கவிட்டு இது போன்ற அடாவடி காரியங்களில் ஈடுபடும் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications