எனக்கு பதவி கிடைத்தது தமிழ்நாட்டுக்கான பெருமை..ஜார்க்கண்ட் ஆளுநராகும் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
திருப்பூர்: தமக்கு பதவி கிடைத்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான பெருமை என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த பாஜக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி இன்று உத்தரவிட்டார்.
அருணாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கெய்வால்யா த்ரிவிக்ரம் பர்நாயக்-கும், சிக்கிம் மாநில ஆளுநராக லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யாவும், ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேச ஆளுநராக ஷிவ் பிரசாத் ஷுக்லாவும், அஸ்ஸாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியாவும், ஆந்திரப் பிரதேச ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நஸீரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநில ஆளுநராக இருந்த பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் மாநில ஆளுநராகவும், சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இருந்த சுஷ்ரி அனுஷியா உய்க்கே மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல. கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநில ஆளுநராக இருந்த பாகு சவ்ஹான் மேகாலயா ஆளுநராகவும், இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீகார் மாநில ஆளுநராகவும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ், மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும், அருணாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த டாக்டர். பி.டி. மிஸ்ரா லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் திங் கோஷ்யாரி மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் ராதா கிருஷ்ணன் மாத்தூர்-ரின் ராஜினாமாவை ஏற்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஆளுநராக தாம் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மீண்டும் ஒரு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ் இனம், கலாசார, பண்பாடு, மொழியின் மீது மகத்தான பாசம், மரியாதை, அன்பு வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில பழங்குடி இன மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பணியாற்றுவேன். இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான பெருமை. இதனால் ஜனாதிபதி, பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications