ஜெபம் செய்து 2024ல் காங்கிரஸை ஜெயிக்க வைப்போம்! திமுக எம்.எல்.ஏ.வுக்கு இந்து முன்னணி கண்டனம்!
திமுக எம்.எல்.ஏ. இனிகோ பேச்சுக்கு இந்து முன்னணி எதிர்ப்பு.
திருப்பூர்: ஜெபம் செய்து 2024ல் காங்கிரஸை ஜெயிக்க வைப்போம் எனக் கூறிய திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜுக்கு இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இனிகோ இருதயராஜ் மீது ஆளுநர் ரவி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தேச விரோதம்
''நாட்டின் வளர்ச்சிக்காக தொலைநோக்கு பார்வையோடு செயல்படும் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக, தேச விரோதிகளுடன் சிலர் கைகோர்த்துள்ளனர். அதனுடைய ஒரு வெளிப்பாடு தான் சமீபத்தில் பி.பி.சி. நிறுவனத்தின் ஆவணப்படம். அதனுடைய தொடர்ச்சி தான், திருச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜின் பேச்சு.''

ஜெபம் செய்து
''அவர் கிறிஸ்தவ மக்களிடம், 'நாம் எப்படி ஜெபக்கூட்டங்களில் பிரசாரம் செய்து, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை கொண்டு வந்தோமோ, அதுபோல நாம் ஜெபம் செய்து 2024ல் பா.ஜ.,வை வீட்டுக்கு அனுப்பி காங்கிரஸ் கட்சியை ஜெயிக்க வைக்க வேண்டும்' என கூறியிருக்கிறார்.''

அனைவருக்கும் பொதுவான
''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., குறிப்பிட்ட ஒரு மதத்தின் சார்பாகப் பேசுவது பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிரானது. அனைவருக்கும் பொதுவான எம்.எல்.ஏ., ஒரு மதக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களை வழிகாட்டுவதும், அதை கிறிஸ்தவ மிஷனரிகள் ஏற்றுக் கொள்வதும், மத ரீதியான செயல்பாடுகளை விட அரசியல் செயல்பாடுகளை செய்கிறது என்பது தெளிவாக புரிகிறது.''

ஆளுநர் நடவடிக்கை
''லோக்சபா தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளையும், அவர்களுக்கு இந்தியாவில் களம் அமைத்துக் கொடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகளையும் மத்திய உள்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேச விரோத செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.இனிகோ இருதயராஜ் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications