2 மணி நேரத்தில் அகற்றப்பட்ட தீண்டாமைச் சுவர்! கலெக்டரிடம் கறார் காட்டிய கனிமொழி!
திருப்பூர்: தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு மீது 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தங்கள் கோரிக்கையை கனிமொழி 2 மணி நேரத்தில் நிறைவேற்றிக் கொடுத்ததால் அவருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதன் விவரத்தை இங்கே பார்க்கலாம்.

2024 திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு நேற்று சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.
அப்போது திருப்பூர் மாவட்ட அவிநாசி அருகே உள்ள சேவூர் ஊராட்சி தேவேந்திர நகரை சார்ந்த மனோன்மணி என்பவர் கனிமொழியை நேரில் சந்தித்து, தீண்டாமைச் சுவரை அகற்ற கோரிக்கை மனுவை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி, தீண்டாமைச் சுவர் அகற்றுவது பற்றி விவரம் கேட்டார்.
அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் தீண்டாமைச் சுவரில் ஒரு பகுதி அகற்றப்பட்டது. மீதி சுவரை வரும் திங்கட்கிழமை அகற்றப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேயூர் ஊராட்சியில், "தீண்டாமைச் சுவரால் அரசு சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக" பட்டியலின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சேயூர் ஊராட்சியின் தேவேந்திரன் நகரில் பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இந்த நகருக்கு அருகே வி.ஐ.பி கார்டன் பகுதியில் மற்ற சமூகத்தினர் உள்ளனர்.
''இந்த இரண்டு பகுதிக்கும் மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால், அரசு சாலையை பயன்படுத்த முடியாமல் அதிக தொலைவு நடக்க வேண்டியுள்ளது. இதனால், தீண்டாமைச் சுவரை இடித்து வழி ஏற்படுத்த வேண்டும்,’’ என, தேவேந்திரன் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீண்டாமைச் சுவர் பிரச்சனை என்பது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனையாகும். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம்,உத்தப்புரம், சந்தையூர் என பல இடங்களில் தீண்டாமைச் சுவர் பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீண்டாமைச் சுவர் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை ஒன்றைக் கூட வெளியிட்டார்.
இந்நிலையில் தான் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தீண்டாமைச் சுவர் புகார் குறித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேவூர் ஊராட்சியிலும் நேற்று தீண்டாமைச் சுவர் அகற்றப்பட்டுள்ளன. கனிமொழி அழைத்துச் சொல்வதற்கு முன்னரே மாவட்ட நிர்வாகம் இதன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சனைக்கு வேலையில்லை.












Click it and Unblock the Notifications