திருப்பூரில் வீரமணி வந்த கார் கண்ணாடி உடைப்பு.. இந்து முன்னணியினர் மீது தடியடி
திருப்பூர்: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க திருப்பூர் வந்த திராவிடர் கழக தலைவர் வீரமணியின் கார் கண்ணாடியை உடைத்து எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக, காங்கிரஸ் மற்றும இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கார் கண்ணாடி உடைப்பு
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திருப்பூர்- தாராபுரம் சாலையில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜின் காரில் திராவிடர் கழக தலைவர் வீரமணி வந்துள்ளார். அப்போது இந்து முன்னனியினர் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தயாக கூறப்படுகிறது. இதில் அந்த காரின் கண்ணாடி உடைந்தது.

வீரமணிக்கு பாதுகாப்பு
இதனால் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் இந்து முன்னணியினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.அதன் பின்னர் பாதுகாப்பாக பிரச்சாரம் நடந்த கரட்டாங்காடு பகுதிக்கு வீரமணி வந்தடைந்தார். இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

வீரமணி விமர்சனம்
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கி.வீரமணி தமிழகத்தில் ஒன்று மதசார்பற்ற கூட்டணி மற்றொன்று ஆவியும் காவியும் சேர்ந்த கூட்டணி என்று கடுமையாக விமர்சித்தார்.. பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பேசிய வீரமணி, தோல்வி பயத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் பாஜக கூட்டணி கலவரத்தை தூண்டிவிடும் வகையில் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

தி.க. போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் பெரியார் சிலை நேற்று அதிகாலை உடைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்தது. இதற்காக சென்னையில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இந்து முன்னணியினர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியிலும் கி.வீரமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications